Friday, February 22, 2013

நான் கலந்து கொண்ட 'ஜும்மாஹ் '.



              ' ஜும்மா' மேடைகள் சிந்தனைப்  பீடைகளை முஸ்லீம் உம்மத்தில் வளர்த்து விடும் வழமையான பணியை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறது என்பதற்கு , 22/02/2013 ஆகிய இன்று நான் கலந்து கொண்ட எனது 'மஹல்லா மஸ்ஜித் ஜும்மாஹ் ' ஒரு சிறந்த சான்றாக இருந்து வருகின்றது . வழமையான சம்பிரதாய தொடக்கத்துடன் ஆரம்பித்தபோது நானும் காதை கூர்மைப்படுத்தி கேட்க ஆரம்பித்தேன் .

                                 'தடி எடுத்தவன் வேட்டைக்காரன் ' என்ற பாணியில் நடப்பு சூழ்நிலைகளை ஒருவர் 'மிம்பரில் ' இருந்து கொண்டு அநியாய முழக்கம்  கொடுத்துக் கொண்டிருந்தார் . தனி நபர் விமர்சனத்தை நான் அடியோடு வெறுத்தாலும் அங்கு குறிப்பிட்ட குறித்த கருத்து அகில இலங்கை 'ஜம்மியத்துல் உலமாவின் ' நிலைப்பாடு என அந்த பேச்சாளர் அடித்து சொன்னதன் காரணமாக அது பற்றி பிரஸ்தாபிக்க வேண்டிய கட்டாயத்தை நான் உணர்ந்தேன் . 

                                  தற்போது இலங்கையில் நிகழும் முஸ்லீம்களுக்கெதிரான மதப் பேரின வாதத்தின் சூடான நெருக்கடிகள் பற்றி ஆதாரப் பீடிகைகளோடு நன்றாகவே குறித்த 'ஜும்மாஹ் ' ஆரம்பிக்கப்பட்டது . ஆனால் நிகழ்கால சூழ்நிலைக்கு இலங்கை  முஸ்லீம் எவ்வாறு முகம் கொடுப்பது ? என்ற வினாவைச் சுற்றி விடயம் வந்தபோது 'தவக்குலுக்கும் ' நடத்தைக்கும் இடையிலான நியாயமான 'சுன்னாஹ் ' வின் முன்னால் சிறுபான்மை என்ற அச்சத்தை ஒரு ஆபத்தான ' கிளைமோர் வெடிகுண்டாக்கி ' பொருத்தி விட்டு 'தாண்டினால் வெடிக்கும் '! என கடுமையாக குறித்த பேச்சாளர் எச்சரித்தார் !? அவரின் பல உளறல்களில் ஒன்றை மட்டும் கீழே உதாரணத்துக்கு தருகிறேன் .

                                      'அப்துல் முத்தலிப் 'பின் ஆட்டு மந்தைகளை 'கவுபாவை ' இடிக்க வந்த 'ஆப்ரஹாவின் ' யானைப்படை கைப்பற்றியபோது ,அதை மீட்க வந்த   'அப்துல் முத்தலிப் 'தன்னுடைய ஆட்டுமந்தையை தனக்கு கொடுத்து விடுமாறு ,கீழ்ப்படிந்த நிலையில் கோரிக்கை விடுக்க ஏளனத்தோடு 'ஆப்ரஹா ' "கவுபாவையே இடிக்க வந்துள்ளோம் ! அதைப் பற்றி பேசாமல் உன்னுடைய ஆட்டு மந்தையை பற்றி பேசுகிறாயே !?" என்ற வினாவுக்கு அப்துல் முத்தலிப் சொன்ன பதிலான "ஆட்டு மந்தை என்னுடையது 'கவுபா அல்லாஹ்வுடையது அதை அவன் பார்த்துக் கொள்வான் " !! என்ற பதில் ஒரு சிறந்த நடத்தையாக இலங்கையின் நிகழ்கால சூழ்நிலைக்கு தீர்வாக பேசிவிட்டு ; "தவக்குல் தொழுகை ,நோன்பு , 'அஹ்லாக் ' போன்றவற்றை மட்டுமே முஸ்லீம் 'உம்மாஹ் ' கைக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார் .


                                       குறுக்கும் நெடுக்குமாக பல விமர்சிப்புகளை இவரின் விளக்கங்கள் காட்டி நிற்கின்றன . இருந்தும் நான் அதை செய்ய வரவில்லை சுருக்கமாக நான் கேட்பது 'அப்துல் முத்தலிப் ,ஆப்ரஹா ' சந்திப்பு சம்பவம் எப்போது இவருக்கு 'சுன்னாஹ்' வானது !?
 என்ற வினாவை மாத்திரமே ஆகும் . வன்முறையை பற்றி இங்கு நான் பேசவே வரவில்லை ஆனால் கருத்தியல் ரீதியில் அநீதியை தட்டிக் கேட்கும் இயல்பான மனப் பாங்கின் மீதும் 'சீல் ' வைத்து அதை அவர் சார்ந்த 'உலமா சபை ' பார்த்துக் கொள்ளும் என வாக்குறுதி வேறு கொடுக்கிறார் !? 

                                          நிகழ்காலத்தையும் சுன்னாவையும் ஒப்பிட்டு ஒரு முஸ்லிமின் வாழ்வியலை எவ்வாறு தீர்மானிப்பது ? என்ற அடிப்படையில் இன்றைய முஸ்லீம் உம்மாவின் நிலை 'ஆபிரஹாவின் ' காலத்துக்கு பின்தள்ளிப் போய் விட்டது ! என சிலநேரம் குறித்த பேச்சாளர் குத்திக் காட்டுகிறாரோ தெரியவில்லை . சுன்னாவை வாழ்வியல் ஆக்குவது ஒரு நுணுக்கமான அரசியல் அதை சரியாக செய்யாவிட்டால் இஸ்லாம் மார்க்கம் என்ற நிலையில் இருந்து 'மதம் ' என்ற குறுகிய வாதத்துக்குள் முடக்கப்பட்டு விடும் . உண்மையில் எமக்கு நடந்துள்ளது என்ன ?

     ஏற்கனவே மதச்சார்பின்மை என்ற வாழ்வியலின் கீழ் ஒரு மதமாகவே தான்  இஸ்லாம் நோக்க வைக்கப்பட்டுள்ளது . முதலாளித்துவத்தின்   சமரசமே உலகின்அரசியலாக்கப் பட்டுள்ளது . 'ஜனநாயகத்தின் ' பெரும்பான்மையின் கீழ் சலுகை அடிப்படையில் சிறுபான்மை வாழ்வே விதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது . இவை எல்லாவற்றோடும் சேர்ந்து 'வஹ்ன் ' எனப்படும் உலகத்தை நேசித்து மரணத்தை வெறுக்கும் மனப் பாங்கின் கீழ்' வாழு வாழ விடு 'எனும் நடத்தையின் கீழ் சத்திய இஸ்லாத்தை அதற்கு எவ்வாறு பயன்படுத்துவது !? என்பதுதான் சிறுபான்மை வாழ்வுக்கு 'உலமாக்கள் தரும் தீர்வா !? இந்த 'ஜும்மாவும் ' சும்மா வாகிப் போன கவைலையோடு நானும் வீடு வந்தேன் .

1 comment:

  1. இலங்கையில் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் அநேக ஜும்மாக்கள் இப்படிதான். சில பயான்களை கேட்கும் போது கோபம் தான் வரும். என்ன செய்வது! துஆ செய்யுங்கள் சகோ.

    -- ஷுஐப்

    ReplyDelete