Thursday, August 15, 2013

ஒரே பிறை பல பெருநாள் !!!






(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா சபையின் கண்டனச் சீற்றத்தின் ஒரு துளியாவது இலங்கை மஸ்ஜித் விவகாரங்களில் வெளிப்படவில்லை ! ஆனால் கண்ட பிறையை வானிலை ஆய்வுகளை முன்னிறுத்தி மறுக்கும் துணிவு மட்டும் மிக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது !? இலங்கை முஸ்லீம் உம்மாவை சர்வதேச முஸ்லீம் உம்மாவை விட்டும் பிரித்து தாம் அதன் 'பஞ்சாயத்து' போர்ட் ஆகி சிங்கத்தின் வேலிக்குள் கன்றுக் குட்டிகளாக முஸ்லீம் உம்மாவை குடியிருக்க வைக்க விரும்பும் அடிவருடிக் குள்ளநரிகளை இனம் காண இந்த பிறை விவகாரம் ஒரு நல்ல சந்தர்ப்பமே )

இலங்கையில் இம்முறை (அதாவது ஹிஜ்ரி 1434) ரமழான் மாதம் நிறைவு செய்வது மற்றும் ஷவ்வால் மாத தலைப்பிறையை கணித்தல் தொடர்பில் மிகப் பெரிய ஒரு சர்ச்சையே முஸ்லீம் உம்மத்துக்கு மத்தியில் ஏற்பட்டது .இறுதியாக இரு வேறுபட்ட தினங்களில் (அதாவது ஆங்கிலக் கலண்டரின் படி வியாழன் (08/08/2013) ,வெள்ளி (09/08/2013) ஆகிய தினங்களில் ) பெருநாளை கொண்டாடியது .

29 நோன்புகளை நோற்றிருந்த முஸ்லீம் உம்மா புதன்கிழமை (அதாவது ஆங்கிலக் கலண்டரின் படி 07/08/2013 ) அன்று மாலை பிறை பார்க்குமாறும் ,பிறை தென்படும் பட்சத்தில் கொழும்பு பெரிய பள்ளி வாசலுக்கு தகவல் தரும் படியும் உலமா சபையினால் அறிவுறுத்தப்பட இதனடிப்படையில் 08/08/2013 வியாழக்கிழமை பெருநாள் வருவதற்கான சாத்தியப்பாடு எதிர்வு கூறப்பட்டிருந்தது .( ஆனால் அரச விடுமுறை 09/08/2013 வெள்ளிக் கிழமையே ஆங்கிலக் கலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது .)

பிறை தெளிவாக தெரியக்கூடிய பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் இதனடிப்படையில் பிறை பார்க்க தம்மை தயார் படுத்தி அவதானித்ததன் மூலம் ஷவ்வால் மாத தலைப்பிறை கிண்ணியா , புத்தளம் , மன்னார் , பேருவளை போன்ற பகுதிகளில் காணப்பட்டது . மேலும் கொழும்பு பெரிய பள்ளி ,மற்றும் உலமா சபைக்கு தகவல் அனுப்பப் பட்டும் ,உலமா சபை அதிர்ச்சிகரமாக கிடைத்த தகவல்களை புறக்கணித்து வானொலி மூலம் 08/08/2013 வியாழக் கிழமை நோன்பு நோற்று ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 09/08/2013 வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடுமாறு அறிவிப்புச் செய்தது .

இதன் பின்னர் பிறை பார்க்கப் பட்டதாக உறுதிப்படுத்திய பகுதி முஸ்லீம்கள் (கண்ட பிறையை காணவில்லை என்றா கூறமுடியும் !? என்ற அடிப்படையில் ) வியாழக்கிழமை அன்று தாம் பெருநாளை கொண்டாடப் போவதாக அப்பகுதி உலமா சபை பிரதிநிதிகளின் ஏகமனதான ஆதாரவோடு முடிவெடுத்தனர் . இந்த முடிவின் பின்னரே உலமா சபையின் இன்னொரு சர்ச்சைக்குரிய முகம் வெளித்தெரிய ஆரம்பித்தது .

'ஹலால்' விவகாரத்தில் வெற்றிகரமாக பின்வாங்கிய உலமா சபை இந்த 'ஹிலால் '(பிறை)விவகாரத்தில் முஸ்லீம் உம்மத்தின் ஒரு பகுதியினர் மீது ஒரு அதிரடித் தாக்குதலை வியாழக்கிழமை பகல் ஒரு மணியளவில் அதன் தலைவரின் வார்த்தை தோட்டாக்கள் மூலம் பின்வருமாறு நடாத்தியது . அது இது தான் வியாழக்கிழமை நோன்பை விட்டவர்கள் தௌபா செய்ய வேண்டும் ,ஒரு நோன்பை களாச் செய்ய வேண்டும் என்ற முடிவே ஆகும் .இது பலவீனப் பட்டுள்ள முஸ்லீம் உம்மா விடயத்தில் 'இளகிய இரும்பு கிடைத்தால் கொல்லன் ஓங்கி ஓங்கி அடிப்பானம் என்பது போல இருந்தது .

இந்த விடயம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பல்வேறு கோணங்களில் பேசப்பட்டாலும் முஸ்லீம் உம்மா சர்வதேச சமூகம் என்ற வகையில் சிந்திக்க வேண்டிய மிகச் சரியான திசை எது ? என்பது பற்றி சற்று ஆராய்வது பொருத்தமாகும் .முதலில் பிறைக் கணிப்பு தொடர்பாக முஸ்லீம் உம்மத்தினுள் இருக்கும் பிரதான சர்ச்சைகள் என்ன ?என்று நோக்கினால் 1.சர்வதேசப்பிறை 2.தேசியப்பிறை என்ற இரண்டு பிரிவுகள் பொதுவாக முஸ்லீம் உம்மத்தின் மத்தியில் இருப்பது தெரியவரும் .

அதிலும் சர்வதேசப் பிறையை ஏற்பவர்களில் சவூதி அரேபியா போன்ற குறித்த பகுதியின் கணிப்பீட்டை மற்றும் ஏற்போர் , உலகின் எப்பகுதியின் பிறைக் கணிப்பையும் ஏற்போர் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றனர் .அதேபோல தேசியப்பிறை கணிப்பீட்டில் நியம எல்லை ,தூரம் ,மற்றும் பிராந்தியப் பிரிவுகள் என ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் சர்ச்சைகள் இருக்கின்றன .ஆக மொத்தமாக ஒரு சம்பிரதாய பூர்வமான சடங்காக இந்த பிறை விவகாரம் மாறி முஸ்லீம் உம்மத்தின் மீதான ஒரு அவசியமான இறை கட்டளையை புறக்கணிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது .

அதாவது நோன்புக்காக பிறை ,பெருநாளுக்காக பிறை ,ஹஜ்ஜுக்காக பிறை என்ற குறுகிய வட்டத்தோடு இந்த பிறை விவகாரம் மங்கிப் போய் விடுகிறது ! வஹியின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்தப் பார்வை சரியானதா ? பிறை விடயத்தில் வஹி எதிர்பார்க்கும் செயற்திட்டம் என்ன ? என்பது பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டும் . அதற்கான ஒரு தொடக்கத்தை மட்டுமே நான் கீழே தருகின்றேன் .

தேய்ந்து வளரும் பிறையைப் பற்றி நபியே அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலங் காட்டியாகவும் ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது 
(அல் பகரா :வசனம் 189)


நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் ; வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்தே அவனது பதிவேட்டில் (இவ்வாறே இருந்தது .)அவற்றில் 4 மாதங்கள் புனிதமானவை. இதுவே சீரான மார்க்கம் ஆகும் . எனவே , அந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள் ........ 


( அத்தௌபா : வசனம் 36)




மேலே தந்த வஹியின் வசனங்கள் மனித சமூகத்திற்கு பொதுவான காலங்காட்டியாக (வளர் ,தேய்) பிறை என்ற விடயம் இருப்பதை காட்டி நிற்கின்றது .அத்தோடு முஸ்லீம் சமூகம் அந்த மகத்தான பணியை முழு உலகத்திற்காகவும் ,மனித சமூகத்திற்காகவும் பொறுப்பு மிக்கவர்களாக தமது கையில் எடுத்து பிறையை அடிப்படையாக கொண்ட மாதாந்த நாட்காட்டியை ஒரே திகதிக் கோட்டின் அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் பணித்து நிற்பதாக நான் கருதுகிறேன் .

இந்த அடிப்படையில் தான் ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட கலண்டர் முறையை உமர் (ரலி ) சிந்தித்து அமுல் படுத்தி இருக்கலாம் . இந்த முன்மாதிரியைக் கொண்ட விடயம் தொழில் நுட்ப கால மாற்றங்களில் சிறப்பாக விரிவு படுத்தப் பட்டிருக்க வேண்டும் .ஆனால் இன்று மனித சமூகத்தின் ,முஸ்லீம் சமூகத்தின் பல்வேறு அவசிய விடயங்களில் இஸ்லாத்தின் சுதந்திரமான பிரயோகமான அதன் கிலாபா அரசு இன்று இல்லாததால் கைவிடப்பட்டுள்ளது . அதிலே இதுவும் ஒன்றாகும் .




இஸ்லாத்தில் தொழுகை நேரங்கள் சூரிய ஓட்டத்தை அடிப்படையாக கொண்டே கணிக்கப்பட்டுள்ளது .இந்த அடிப்படையில் நேரக்கணிப்பீட்டுக்கான அடிப்படையாக சூரியனும் , நாள் ,மாதம் , வருடம் என்பன வஹியின் திட்டவட்டமான தீர்ப்பின் படி சந்திரனை வைத்தே கணிக்கப் பட வேண்டும் .என்பதும் அது ,தேச ,தேசிய, பிரதேச குப்ரிய பிரிவுகளை உள்வாங்கி எடுத்தார் கைப்பிள்ளை கலண்டராக அது மாறிவிடாமல் அது முழு உலகத்திற்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும் ஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள் என்பது முஸ்லீம் உம்மத்தின் ஆத்மார்த்த சகோதரத்துவத்தை கேலிக்கூத்தாக்கி குப்பார் கைகொட்டிச் சிரிக்கும் ஒரு கோமாளித்தன வடிவத்தை வழங்கி விடும் இன்று அது நடந்துள்ளது .இந்த கசப்பான சூழ்நிலை இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா உட்பட இன்னும் சில நாடுகளிலும் நடக்கின்றது . 

முஸ்லீம் உம்மா சர்வதேச சகோதரத்துவத்தை மானசீகமாகவேனும் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆக்கபூர்வமான பொழுது இந்த எடுத்தார் கைப்பிள்ளை பிறைக் கணிப்பீட்டால் முற்றாகவே தடைப்படுகிறது .ஒவ்வொரு தேசியமும் ,ஒவ்வொரு தேசமும் , ஒவ்வொரு பிரதேசமும் குப்பி விளக்கோடு காலம் தள்ளும் பண்டைய பஞ்சாயத்து மரபு கிராமங்களாக உலமாக்களாலும் , இஸ்லாமிய இயக்கங்களாலும் இன்று 
மாற்றப் பட்டுள்ளது . ஆளுக்கொரு கூட்டம் ,நாளுக்கொரு தீர்ப்பு என்ற வகையில் முஸ்லீம் சமூகம் திண்டாட வைக்கப் படுகிறது .

குப்ரிய தாகூதிய மேலாதிக்க சக்தியையும் அதன் அரசியலையும் நம்பி அதற்கு ஒத்தோதி அந்த சரணடைவு அரசியலில் கிடைக்கும் அற்ப சுகங்களுக்காக விலை போய் விட்ட உலமாக்களையும் இஸ்லாமிய இயக்கங்களையும் பற்றி என்ன சொல்வது ! தக்கன 
பிழைத்தலுக்கான ஒரு நியாயத்தில் மார்க்கத்தை அழகாக விலை பேசுபவர்களே இலங்கையின் உலமா சபை மற்றும் சில இஸ்லாமிய இயக்கங்கள் என்பது கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு தாகூதின் சின்னமான தேசியக் கொடியை பள்ளிவாசல்களில் ஏற்றச் சொன்னபோதே புரிந்திருக்க வேண்டும். 

இனி என்ன பாம்பு தின்னும் ஊரில் நடுதுண்டை வேண்டிக்கொள் ! என்ற தத்துவத்தை 'வஹியை ' விட மேலாக்கி, பிறை தெரிந்தது உறுதிப் படுத்தப் பட்ட பின்பும் குப்பார் இட்ட கலண்டர் திகதியில் பெருநாள் கொண்டாடச் சொன்னது ஒரு பெரிய விடயமே இல்லை ! 'ஹாக்கீமியத்தில் ' கை வைத்த பின் ஹராம் என்ன ஹலால் என்ன !இவர்களது பாசையில் 'லக்கும் தீனுக்கும் வலியதீன் ' என்பது உன்னையும் வணக்குகிறோம் உன்னிடமும் உதவி தேடுகிறோம் ! என்பதா !? இந்த இலுப்பம் பூக்களை சர்க்கரையாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லீம்கள் கீழ்வரும் வஹியின் வசனத்தை 
சற்று திரும்பிப் பார்க்கவும் . இந்த வசனம் தொடர்பான மேலதிக விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை தருகிறேன் .


அவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் சமய அறிஞர்களையும் , துறவிகளையும் மர்யமுடைய மகன் ஈசா மசீகையும் தம் கடவுளாக ஏற்றுக் கொண்டனர் . அவர்கள் ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றே கட்டளையிடப்பட்டனர் . அவனைத் தவிர வேறு இறைவனில்லை . அவர்கள் கற்பிக்கும் இணைகளை விட்டு அவன் தூய்மையானவன் .

                                                                    
( சூரா அத்தௌபா : வசனம் 31)

























































No comments:

Post a Comment