Monday, December 16, 2013

அற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).



     அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் விசேடமாக குறிப்பிட்டுக் கூறக்கூடியவை . அத்தகு விடயங்கள் இஸ்லாத்தின் சித்தாந்த வெற்றியை எதிர்வு கூறியிருப்பதோடு சில ஆற்றல் மிக்க மனிதர்களை உதாரணப் படுத்தி நிற்கிறது . அத்தகு மனிதர்களின் சராசரி மனிதப் பலவீனங்களை தாண்டி இஸ்லாத்தின் இலட்சியக் கொடியை ஏந்தி நிற்பதிலும் பாதுகாப்பதிலும் ,அதன் ஆதிக்க எல்லையை விரிவு படுத்துவதிலும் அவர்கள் செய்த தியாகங்கள் சேவைகள் எழுத்தில் வடிக்க முடியாதது . அத்தகு வியக்கத்தக்க மனிதரில் ஒருவரே  உமர் இப்னு கத்தாப் (ரலி )ஆவார்கள் .


   அது இஸ்லாத்தை சுமந்த மனிதர்களின் மிக இறுக்கமான மக்கா காலப்பகுதி . இரகசியப் பிரச்சார எல்லைகளை தாண்டி அந்த முஸ்லீம் உம்மா இஸ்லாம் எனும் சித்தாந்த அறிமுகத்தை பகிரங்கப் படுத்த ஏறத்தாழ சற்று தலைகாட்ட தொடங்கிய நேரம் . ஹம்சா (ரலி )அவர்களின் இஸ்லாமிய தழுவல் குரைசிக் குப்பார்களின் இதயத்தை மிக ஆழமாகவே காயப்படுத்தி இருந்தது . அப்போது இன்னொரு அதிர்ச்சி அது வெந்த புண்ணில் கூரான ஈட்டியை செருகியது போல் இருந்தது உமர் (ரலி )அவர்களின் இஸ்லாமிய தழுவல் !

    இஸ்லாமிய வரலாற்றில் உமர் (ரலி ) அவர்களின் பங்களிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் யாராலும் குறை மதிப்பீடு செய்ய முடியாது . அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களின் கணிப்பில் அடிப்படையிலான பிரார்த்தனை அபூஜஹல் ,அல்லது உமர் (ரலி ) ஆகிய இருவரில் ஒருவரை இஸ்லாமிய அணியின் பக்கம் வேண்டுவதாக இருந்தது .அந்த வகையில் உமர் (ரலி )அவர்களின் இஸ்லாமிய இணைவு தூதர் (ஸல் )அவர்களின் வேண்டுதல் இறைவனின் தேர்வு என்ற வகையில் மிகப் பிரசித்தமானதே.

     அடிக்கடி கோபப்பட்டு வாளை ஏந்திக்கொண்டு வரும் இவரிடம் அப்படி என்ன சிறப்பம்சம் இருந்திடப் போகிறது !? மிகை வீரம் ,தியாகம் ,அர்ப்பணிப்பு என சராசரி சஹாபிகளை விட இந்த உமர் (ரலி )எந்த இடத்தில வித்தியாசப் படுகிறார் !? எனும் கேள்வி எனக்குள் அவரிடமிருந்து விசேடமாக எதையோ தோடச் சொன்னது ."உமரின் (ரலி ) நாவில் அல்லாஹ் பேசுகிறான் " , " எனக்குப் பின் ஒரு நபி வருவதாக இருந்தால் அது உமராகத்தான் இருக்கும் " என்ற நபிமொழிகள் இது விடயத்தில் என்னை இன்னும் ஊக்கப் படுத்தியது .அது எது ?


       ஒரு சித்தாந்தத்தை அரசியல் வடிவப் படுத்தி பரவலாக்கம் செய்பவர்களை சித்தாந்த சிற்பிகள் என பொதுவாக அழைப்பர் .ஒரு சராசரி மனிதன் ஒரு சிற்பியை பார்க்கும் போது அவனது அசைவுகள் ,நகர்வுகள் சிலபோது புரியாத ஒன்றாகவும் ,இன்னும் சிலபோது தேவையற்றதாகவும் தோன்றலாம் . இன்னும் சிலபோது அவன் செதுக்குகிறானா ,சிதைக்கின்றானா !? என சந்தேகமும் தோன்றலாம் . அதன் இறுதி நிலை ஒரு உருவத்தை காட்டி நிற்கும் போதே அந்த பார்வையாளனுக்கு உண்மை புரியும் .

    அதேபோல ஒரு சித்தாந்த சிற்பி என்பவன் தான் சுமந்த சித்தாந்த அடிப்படையில் ,இலக்குகள் ,நிலைப்பாடுகள் சிதையாமல் அரசியல் வடிவமாக விரிவுபடுத்தி பாதுகாக்கும் கலைஞன். இவனது நடைதைகளிலும் செயல்களிலும் ,ஒரு சராசரி பாமரன் ஒருவனால் ஊகிக்க முடியாத பல நகர்வுகள் காணப்படும் . அந்த வகையில் இஸ்லாம் எனும் சித்தாந்தத்துக்கு உலகளாவிய அரசியல் அதிகார அங்கீகாரத்தை (அடுத்த மனிதர்கள் விரும்பியோ விரும்பாமலோ ) உமர் (ரலி )அவர்களின் ஆட்சியில் இருந்தே கிடைக்கப் பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை .

   அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) தொடங்கி அபூபக்கர் (ரலி )அவர்களின் ஆட்சிக் காலம் வரை DEFENSIVE வேண்டிய STATE POLITICS தான் மதீனாவில் இருந்தது . யர்மூக் களம் கூட ரோமர்களை அச்சப்படுதுவதன் ஊடாக மதீனா இஸ்லாமிய அரசை பாதுகாப்பது என்ற அரசியலையே கொண்டிருந்தது . பாரசீகம் ரோம் உட்பட அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) காலத்தில் இஸ்லாத்தின் தூதுச் செய்தி அனுப்பப் பட்டிருந்தாலும் ஜிஹாதா ,ஜிஸ்யா வா ? என்ற இஸ்லாத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்கு உறுதியான நடைமுறை வடிவம் கிடைத்தது அன்றைய வல்லரசான பாரசீகம் வீழ்த்தப் பட்டதன் பின்னரே ஆகும் , அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) ஹிஜ்ரத்தின் போது எதிர்வு கூறப்பட்ட இந்த வெற்றி உமர் (ரலி )கலீபாவாக ஆனபின்பே நிகழ்ந்தது . இன்னும் பைத்துல் முகத்திஸ் உள்ளடங்கலான பாலஸ்தீனம் இஸ்லாத்தின் அதிகாரத்தின் கீழ் வந்ததும் இந்த உமர் (ரலி )அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஆகும் . அந்தவகையில் இஸ்லாத்தின் அரசியல் அதிகார வடிவத்தை OFFENSIVE தரம் நோக்கி நகர்த்திய அரசியல் சிற்பியாக இந்த உமர் (ரலி ) காணப்படுகின்றார் . 
                                                      (இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் ..)  

     

No comments:

Post a Comment