Thursday, July 4, 2013

'இகாமதுத் தீனுக்காய் ஸுன்னாவை' மிஞ்சிய 'ஹிக்மத்' ஒரு சிறப்புப் பார்வை .



                   எதிரியின் கையில் அழிவுக்கான ஆப்பைக் கொடுத்து விட்டு சந்தர்ப்பம் வந்தால் அடிக்கலாம் என்ற மனோபாவத்தையும்  அவனுள் வளர்த்து விட்டு ஆட்சித் தலைமையை பிடித்தல் ஊடாக படிமுறை மாற்றம் என்ற 'சிரிஞ்சில் ' இஸ்லாமிக் வக்சினை ' செலுத்தி சமூக மட்டத்தில் தேவைக்கு தகுந்தால் போல் 'டோஸ் ' போட்டு சத்தியத்தை சாத்தியமாக்கலாம் என்ற 'ஹிக்மத் ' இப்போது அதன் ஆபத்தான எதிர்விளைவை எகிப்தில் சந்தித்துள்ளது .




                இந்த நிகழ்வுகள் உண்மையில் சந்தோசப்படும் ஒரு விடயமல்ல என்பதை இஸ்லாத்தின் மீது பற்றுக் கொண்ட முஸ்லீம்' உம்மாஹ் 'உணர்ந்து கொள்ள வேண்டும் .விடயத்தை இயக்கவியல் கோணத்திலோ , தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை மையப்படுத்தியோ சிந்திப்பது என்பதை விட தவறை திருத்திக் கொள்ள ,சரியானதை தேந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமாக சூழ்நிலையை பயன்படுத்துவது சிறந்தது .


            எதிர்தர கோட்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு , விட்டுக்கொடுப்பு என்பனவற்றில் காணப்படும் நிபந்தனை எனும் அரசியல் தந்திரம் மிகச் சரியாக உணரப்பட வேண்டும் . அல்லாது விடின் வீழ்ந்து விடுவோம் அல்லது வீழ்த்தப்படுவோம் என்பது நடைமுறை உண்மையாகும். நடப்பது முரண்பாடான  இரண்டு 'அகீதாக்களுக்கு' இடையிலான போராட்டமாகும் இதில் சமரசம் எனும் நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டதே எதிர்தரப்பு என்பதை இஸ்லாமிய வாதம் பேசுபவர்கள் உணர்ந்த நிலையிலேயே அதை பயன்படுத்த களமிறங்கினர் . எதிர் தரப்பின் பொறுமை ,அதன் எல்லை என்பன பற்றி சற்றும் சிந்திக்காத வகையில் இந்த திட்டமிடல் சிந்திக்கப் பட்டுள்ளது . 



                ஒரே அணி ஆனால் இரு வேறுபட்ட இலக்குகள் அதனால் சந்தர்ப்பங்கள் சிலபோது 'சேம் சைட் கோல் ' போட்டாவது இலக்குகளை அடையவே சிந்திக்கப்படும் .எனவே இங்கு முரண்பாடென்பது உணரப்பட்ட விதி .போராடி மரணித்தல் என்பது வேறு தூக்கு மரத்தில் 
ஏறி கழுத்தில் கயிற்றைப் போட்டாவாறு வாழ்தல் என்பது வேறு ! அந்த வகையில் தற்கொலை அரசியல் ஒரு வெற்றிகரமான பாதையாக பார்க்கப் பட்டுள்ளது என்பதுதான் உண்மையாகும் .




                    எதிர் கோட்பாட்டின்  நிபந்தனையுடன் கூடிய எந்த ஒத்துழைப்பையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) ஏற்றுக் கொண்டதாக சீறாவில் எந்த ஆதாரங்களுமில்லை . அது மக்காவில் அவர்கள் பலம் குன்றிய  நிலையில் இருக்கும் போதோ ,மதீனாவில் பலமான நிலையில் இருக்கும் போதோ நிகழவில்லை .இஸ்லாத்தை நிலைநாட்டுதல் தொடர்பில் 'ஸுன்னா 'விட்டுச் சென்றுள்ள அடிப்படை நியதிகள் பற்றிய தெளிவு ,தேடல் இன்று அவசியமானதாகும் . 


             'ஜாஹிலீயா' என்பது தொழில் நுட்பத்தால் மெருகேற்றப்பட்டுள்ளது ; என்பதுதான் உண்மை .தவிர மிகை தொழில் நுட்பம் என்பது அடிப்படை நியதிகளை மாற்றிவிடாது . அதாவது அபூஜஹளுக்கும் , ஒபாமாவுக்கும் இடையிலான பொது உடன்பாடு மாறிவிடாது .  எனவே ஒரு முஸ்லிமை பொறுத்தவரை தனது வாழ்வியலுக்கான நகர்வுகளை 'ஸுன்னா வில் ' இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் . அந்த நகர்வின் தோல்வியும் வெற்றிதான் . அது அற்ற முயற்சிகளின் இடைக்கால வெற்றிகளும் தோல்விதான் .


                அந்த வகையில் பார்க்கும் போது அல்லாஹ்வின் தூதரது அரசியல் நகர்வில் கீழ்வரும் மூன்று அடிப்படைகள் துல்லியமாக பொதிந்திருப்பதை நாம் அவதானிக்க முடியும் .
1. கூவதுல் அகீதா .(பலம் மிக்க கோட்பாட்டு கட்டமைப்பு )
2. கூவதுல் வஹ்தா .(பலம் மிக்க சகோதரத்துவக் கட்டமைப்பு)
3. கூவதுஸ் சிலாஹ் . (மேற்கூறிய இரண்டையும் அடிப்படையாக கொண்ட இராணுவ வலிமை ) .
   இந்த மூன்று நிலைகளும் சாத்தியப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் வரை அல்லது அத்தகு சூழ்நிலைக்கான நிபந்தனையற்ற ஆதரவுத் தளம் உருவாகும் வரை கருத்தியல் போராட்டத்தையே விடாது தொடர்ந்தார்கள் என்பதுதான் தெளிவான சீரா .



                      அதை விட்டுவிட்டு குப்ரிய கோட்பாட்டின் கீழிருந்து 'செக்கியூலரிச ' செக்கிழுத்து இஸ்லாமிய எண்ணை வார்ப்போம் என்ற ஸுன்னாவின் பாதையற்ற  தவறான வழிமுறைகளை கைவிட்டு சரியானதை தேட இந்த நிகழ்வு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் .அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன் மிக்க கிருபையுடையவன் .



No comments:

Post a Comment