Thursday, September 19, 2013

அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை ஒரு பார்வை .


        ஒரு அகீதாவின் நிலைப்பிற்கும் அதன் வாழ்வியல் பிரயோகத்திற்கும் ,அதன் கட்டமைபின் பாதுகாப்பிற்கும் அதிகாரம் பொருந்திய நிலை என்பது மிகப் பிரதானமானது .எனவேதான் உலகின் ஒவ்வொரு அகீதாவும் தனது செயற்பாடுகளில் அதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை பிரதானப் படுத்தியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது .அதிகாரத்தை வெளிப்படையாக புறக்கணிக்கக் கூடிய வெறுக்கக் கூடிய மதங்களை பொறுத்த மட்டிலும் தனது நிலைப்பிட்காகவும் வளர்ச்சிக்காகவும் புறநடையாக அதிகாரம் நோக்கிய நகர்வுகளை அல்லது ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள சக்தியின் மீது சார்பு நிலைக் கோட்பாட்டையும் கொண்டனவாக இருக்கின்றது . அல்லது சமரசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு உடன்பாட்டையாவது ஏற்படுத்தி விடுகின்றன .

       கிறிஸ்தவம் துறவறம் பற்றியும் உலகை சம்பூர்ணமாக வெறுக்கும் மனப்பாங்கையும் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும் இத்தகு அடிப்படைக்கு மாற்றமாக 'சர்ச்சுகளின்' அதிகார ஆளுமையின் கீழ் மனித சமூகத்தை ஒரு நீண்ட நெடிய காலம் ஆதிக்கம் செய்தது . பின்னர் அறிவியல் ரீதியான அதன் தவறான பார்வை காரணமாக அதன் அதிகார ஆதிக்கம் அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டது .

       இந்த சமரசம் 'சர்சுகளோடு' தனிமனித விருப்புகளோடு மதத்தை மட்டுப் படுத்தினாலும் அதிகார அரசியலின் கீழ் தங்கிவாழும் நிலை மட்டும் அரசியலில் அதன் உள்ளார்ந்த செல்வாக்கு என்பன சற்றும் குறையவில்லை .இன்று கூட அரச சார்பற்ற எனற பெயரோடு அரசுக்குள் ஒரு அரசாக நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி உலகளாவிய ரீதியில் இன்று கூட அமெரிக்க ஐரோப்பிய கூட்டுத் தலைமையில் 'முனிவர் நண்டும் கடல் அணிமணியும் போல ' தொழில் பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது .


  இதே போல பௌத்த சிந்தனையை பொறுத்தவரை உலகில் அருகி வரக்கூடிய ஒரு மதமாக காணப்படுவதனால் பேரினவாத அரசை சார்ந்து தன்னை தக்க வைக்கும் பாதுகாப்பு வேலியாகவும் அதற்கு பிரதி உபகாரமாக முதலாளித்துவ கவர்ச்சி அரசியலின் விளம்பர சாதனமாகவும் மாறி நிற்பதை இன்று எம்மால் அவதானிக்க முடியும் .

வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் பௌத்த மத வரலாற்றில் இந்தியாவின் அசோக மன்னன் பௌத்த மதத்தை தழுவியதன் பின்னர் தான் மிக வேகமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டதை அவதானிக்க முடியும் .இலங்கையை பொருத்தமட்டில் அனுராதபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் எனும் அரசன் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டதில் இருந்துதான் அம்மதத்தின் பொற்காலம் இலங்கையில் ஆரம்பமானது . ஆனால் அடிப்படையில் பௌத்த மதம் துறவறத்தையே வாழ்வியலாக பணிக்கிறது .

மேலும் அண்மைய உதாரணமாக ஆள் வளத்தில் குறைந்த யூத சமூகம் தனது சியோனிஸ தேசத்தை நிறுவுவதற்கும் ,பாதுகாப்பதற்கும் ,விஸ்தரிப்பதட்கும் கிறிஸ்தவ ஐரோப்பிய ,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திட்டமிட்டு பயன்படுத்தியதையும் , இன்றும் பயன் படுத்தி வருவதையும் அவதானிக்கும் போது அரசியல் அதிகாரம் என்பது மனித சமூகத்தின் இராஜ தந்திர இலக்காகவும் ,இலக்கு நோக்கிய இராஜ தந்திரமாகவும் மனித வாழ்வியலோடு பிரிக்க முடியாமல்( வடிவத்தால் சரியாக அல்லது பிழையாக இருப்பினும் )அமைந்துள்ளது . அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவு மிக அவசியமாகும் .

அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவின்மையில் இருந்து அரசு ,அரசியல் பிறக்கும் போது அனேகமாக அது சுயநலம் மிக்க சர்வாதிகாரமாக மாறிவிடும் .இன்று உலகில் ஏற்பட்டுள்ளது அத்தகு நிலைதான் ஆகும் .வாழ்வியலுக்கான வழிகாட்டலை ,சட்ட திட்டங்களை ,வரையறைகளை யார் தீர்மானிப்பது? என்பதே இங்கு இறையாண்மையாகும் .அந்த வகையில் அதிகாரத்துக்கான எல்லையையும் இறையாண்மை வரைவிலக்கணப் படுத்தும் .அதாவது அதிகாரத்தால் இறையாண்மையை கட்டுப்படுத்த முடியாது ஆனால் இறையாண்மை அதிகாரத்தை எல்லைப்படுத்தி கட்டுப்படுத்தும் . 

இறையாண்மை என்பது உண்மையில் இறைவவனின் பண்புக்கூருகளில் சிலதையோ பலதையோ ஒரு மனிதனுக்கோ ,ஒரு சடத்துவ பொருளுக்கோ ,வேறு எதற்கோ இருப்பதாக கருதுவதே ஆகும் . அந்த வகையில் ஒரு தேசத்தின் தேசியத்தின் விசுவாசியாக மாறுவதென்பது கூட இறைவனின் இயற்கையான ஒரு படைப்பினை வழிபடுவதாகும் . 

இயற்கையை கட்டுப்படுத்தும் வலிமை யாரிடம் உள்ளது ? என்ற கேள்வியின் பதிலில் இருந்தே இறைமைக்கான உரிமை புரிந்து கொள்ளப்பட வேண்டும் . அது மனிதனால் முடியாது என்ற தெளிவான விடை மனித மனித மனங்களில் தெளிவான பதிவில் உள்ளதால் அதை மறைத்து மூடவே இறையாண்மை என்ற சொற்பதம் பயன் படுத்தப் படுகின்றது . இன்னும் சற்று தெளிவாக சொன்னால் இறைவனின் உரிமையில் (ஒன்றிலோ ,பலதிலோ )உரிமை கொண்டாடுவது ஆகும் .
இத்தகு தவறான அதிகார அரசியலே இன்று முழு உலகிலும் இருக்கின்றது . 

இன்று எந்த ஒரு ஜனாதிபதியோ ,பாராளுமன்றமோ , மன்னனோ' பிர் அவ்னைப்போல ' நானே இறைவனை விட பெரிய இறைவன் என்று சொல்லப்போவதில்லை .மாறாக இறைவனின் அதிகார ஆதிக்க எல்லையை சில சொல்லாடல்கள் ,பதங்களை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்துவார்கள் . அத்தகு வடிவத்தில் ஒன்றே மக்களால் ,மக்களுக்கு, மக்களுக்காக எனும் ஜனநாயக சிந்தனையாகும். இது ஒரு தவறான அரசியல் வடிவமாக இருந்தாலும் இன்று மனிதன் தனது மேற்போக்கான பார்வையில் அதை ஒரு உயர்ந்த சிந்தனையாக கருதுகிறான் .


இங்கு இறையாண்மை ,அதிகாரம் என்பன முற்று முழுதாக மனிதக் கரங்களில் வந்தடைகிறது . எனவே முஸ்லிமே ! உனது அரசியல் பார்வை இந்த 'ரித்தத் 'நோக்கிய அழைப்பில் இருந்து தொடங்கி விடக் கூடாது . இஸ்லாத்தின் அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய பார்வை முற்றிலும் வித்தியாசமானது . (அது பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .) இந்த நரக நெருப்பில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் .















               

No comments:

Post a Comment