Sunday, November 24, 2013

இஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்.


                    தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு  அரசியலில் தான் முடியும் .



                                                                       அனேகமாக ஒவ்வொரு சிறுபான்மை வாழ்விடங்களிலும் இன ,மத வாத பெரும்பான்மை அரசியலின் இரத்தம் குடிக்கும் மேலாதிக்க அரசியல் இருந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப் படாத விதி!இந்த விடயத்தில் அடிப்படைக் காரணத்தை பற்றி தெளிவு பெறாமல் விளைவுப் பகுதியில் இருந்து தீர்வு நோக்கி சிறுபான்மையை  நகர்த்துவது ஒரு தவறான அணுகு முறை . இந்தத் தவறுதான் மிகச் சிறந்த போராட்ட பாதையாக ஒவ்வொரு சிறுபான்மை நிலங்களிலும் உணர்த்தப் படுகின்றது . எல்லோராலும் மார்தட்டிப் பேசப்படும் ஜனநாயகமும் இந்த பக்கச் சார்பு அரசியலில் பெரும் பான்மையின் பக்கமிருந்து தான் தனது நியாயத்தை காட்டி நிற்கும் .


                        பெரும்பான்மைக்கு எதிராக வெளிப்படையாக சிறுபான்மையின் எந்த நடவடிக்கையும் பெரும்பான்மையின் ஆக்ரோசமான எதிர்ப்பு நிலையை மேலோங்கச் செய்து , மூர்க்கத் தனமாக சிறுபான்மைகள் மீது அத்து மீறவைக்கும் . மிக அண்மைய தசாப்த இன,மத  வாத அரசியல்  நிகழ்வுகளில்இதற்கு சிறந்த ஆதாரங்களை எம்மால் காண முடியும் . 


                                                             இந்த அடிப்படையில் வன்முறையோ , சார்பு ,எதிர் நிலை அரசியலோ பெரும்பான்மையை எதிர் கொள்வதில் ஒரு வெற்றிகரமான பாதையாக உணர முடியாதுள்ளது . ஒரு தேசிய எல்லைக்குள் சிறுபான்மை உள்வாங்கப் படும் போதே ஒரு வகையான அடிமை வரையறைக்குள் புதைந்து போய் விடுகின்றன .  இந்த பக்கச் சார்பு ஆதிக்க அரசியலின் அதி உச்ச நிகழ்வுதான் பெரும்பான்மையின் வன்முறை அடக்கு முறைகள் . இந்த அநியாயத்தின்  சூட்டில் இருந்து தான் சிறுபான்மை தனது வாழ்வுக்கான போராட்டப் பாதையை நியாமாக சிந்திக்க வேண்டியுள்ளது . 


                                                             உரிமைகள் சலுகைகள் போல் காட்டப் பட ,தப்பிப் பிழைத்து முடிந்தால் வாழு என்ற 'jungle law ' பெருந்தன்மையுடன் அள்ளி வீசப்பட ,பெரும்பான்மை அபிலாசை மீது  நேர்ந்து விடப்பட்ட பலிக்கடா வாழ்வே சிறுபான்மை வாழ்வாகும் .மேலும் பெரும்பான்மை எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு அரசியல் வடிவமெடுக்க  சிறுபான்மை முயலும் சந்தர்ப்பங்களில் அத்தகு சிறுபான்மை தலைமைகள் திட்ட மிட்டு அழிக்கப்படும் , சிதறடிக்கப்படும் என்பதும் நாம் கண் கண்ட உண்மைகள் .


                                        ஆகவே சிறுபான்மையை பொருத்தவரை (மற்றும் பொதுவாகவும் )ஜனநாயகம் ஒரு  தோல்வி நிலை கோட்பாடுதான் என்பதில் சந்தேகமில்லை .அதில் தீர்வை விட பக்கச் சார்பும் ,அத்து மீறலும் அதிகமாக இருக்கின்றது .இந்த அரசியல் வடிவத்தை ஏற்றுக்கொண்டு சிறுபான்மை உரிமை ,மற்றும் சுயாதிபத்தியம் பற்றி சிந்திப்பது ஒரு வீண் வேலையாகும் .

                                                         அப்படியானால் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ? அதற்கான விடை மிக அவசரமாக இஸ்லாமிய அகீதாவின் ஆழ்ந்த தெளிவில் இருந்து தனது சிந்தனைத் தரத்தையும், கருத்து வெளிப்பாட்டையும் ,நடத்தையையும் தீர்மானிப்பதோடு ,இஸ்லாத்தின் சித்தாந்த வாதத்தின் கருத்தியலை முற்படுத்திய பகிரங்க பிரச்சாரத்தை பெரும்பான்மை நோக்கி செய்வதாகும் .



                                         இதன் பிரதி விளைவாக இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும் அதன் உலகியல் தேவைப் பாட்டை புரிந்து கொண்ட நிலையில் ,பெரும்பான்மைக்குள் இருந்து ஒரு சார்பாளர் வட்டத்தை உருவாக்க முடியும் . இந்த நிலை முஸ்லீம் உம்மாவை இன ,மத அடையாளப் படுத்தலை தாண்டிய அதன் இயல்பான தோற்றத்தை காட்ட முடியும் .



                                                   மேலும் இஸ்லாத்தின் பொதுத் தலைமையான 'கிலாபா ' அரசியல் எனும் ஒரே  தலைமையின் கீழான ஒன்றிணைவு தொடர்பில் ஆழமானதும் தெளிவானதுமான அறிவையும் அது பெற்றுத் தரும் 'இன்ஷா அல்லாஹ் '.

                      "இமாம் ஒரு கேடயம் ஆவார் .அவருக்கு பின்னால் இருந்து மக்கள் போர் புரிவார்கள் .அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள் "
                                                                                                    (முஸ்லீம் )

ஜாஹிலீய அதிகாரங்களும் எமது நிலையம் !

         இன்றைய ஜாஹிலீய  மேலாதிக்க உலகு,  முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது  அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும்  போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .

                                                                அந்த வகையில் இஸ்லாத்தின் ஆன்மீக அகீதா தவிர்ந்த வாழ்வியல் அகீதாவை விட்டும் முஸ்லீம் சமூகத்தை தூரப்படுத்துவதும் ,அந்த விடயங்களை பிரதான விடயமாக்காது சாதாரண கிளை விடயமாக எடுத்துக் காட்டப்படுவதும் , இஸ்லாம் கூறும் (அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா அம்சங்களும் நடைமுறை சாத்தியமற்றதாக எடுத்துக் காட்டுவதும் ஜாஹிலீய அதிகாரங்களுக்கு ஒரு 
கடமையாகவே ஆகிவிடுகின்றது .

                                                    
                                               மேற்குலகு கிறிஸ்தவ அதிகார மேலாதிக்கத்தில் இருந்தபோது வாழ்வியல் விவகாரங்களிலும் ,அறிவியலிலும் தவறான சிந்தனைத்தரத்தைக் கொண்டு தீர்ப்புக் கூறத் தொடங்கியதே மதம்  வேறு ,உலகியல் விவகாரம் வேறு என்ற தீர்மானத்தோடு மதச் சார்பின்மை எனும்  கோட்பாடு நடைமுறைப் படுத்துவதற்கு ஏதுவாக  அமைந்தது தெரிந்தோ தெரியாமலோ முஸ்லீம்களும் பின்பற்றி வருகின்றனர்  . ஆனால் இன்று கிறிஸ்தவம் கூறும் அதே  சிந்தனைத்தரமே இஸ்லாத்தின் மீதும் பதியப்பட்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் உலாவிடப் பட்டுள்ளது . ஆனால் இந்த (மகத்தான )பணியை செய்வது கிறிஸ்தவ பாதிரிகளோ ,சந்நியாசிகளோ ,யூத ரப்பிகளோ அல்ல மாறாக  முஸ்லீம் உம்மத்தில் இருந்து உதித்த புத்திஜீவிகளே !!!  



                                                              அதிர்ச்சியும் ஆச்சரியமுமான சில பிரச்சாரங்களை, பதிவுகளை நான் சந்தித்தேன். அதில் குப்ரிய அதிகாரங்களின் கீழான , அவர்கள் தரும் ஜாஹிலீய சட்டங்களை பின்பற்றியவர்களாக முஸ்லீம்கள் வாழ்வது நியாயப்படுத்தப் பட்டிருந்தது . அந்த நியாயத்துக்கு அச்சமோ ,நிர்ப்பந்தமோ காரணமாக்கப் படவில்லை . இஸ்லாம் அதை அங்கீகரித்த ஒன்றாக குர் ஆனிய  ஆதாரமாக யூசுப் (அலை ) அவர்கள் சம்பந்தப் பட்ட வசனங்களும் எடுத்தாளப் பட்டிருந்தது .



                                                                          அதாவது யூசுப் (அலை ) நிராகரிப்பாளனான ஒரு மன்னனிடம் அமைச்சராக இருந்தது ஆதாரமாக்கப் பட்டிருந்தது .  முதலாவது இந்த கருத்தியல் கண்ணோட்டமே பிழையானது. ஏனென்றால் 1. நபி யூசுப் (அலை )அவர்களின் 'சரீஆ'  எமக்கு 'சரீஆ' அல்ல என்ற சாதாரண வாதத்தை இங்கு முன்வைக்கலாம் . 2. குறித்த மன்னன் நீதி தவறியதாக குர் ஆன் குறிப்பிடுகிறதே தவிர 'குப்ரில்' இருந்ததாக சொல்லவில்லை . இந்த இரண்டு காரணங்களும் அவர்களின் தவறான கருத்தியலை உடைக்கப் போதுமானதாகும் .




                                                      அபத்தமான குர் ஆன் விளக்க அறிவின் மூலம் இஸ்லாமிய 'சரீஆ' வின் கீழ் தான் முஸ்லீமின் வாழ்வு கட்டாயமானது எனும் கருத்தியலை விழுங்கி ஏப்பம் விட்டு 'குப்ரை 'அங்கீகரித்த   வாழ்வு இஸ்லாம் அங்கீகரித்தது எனும்  ஒரு நூதன விளக்கத்தை நாக்கூசாமல் எடுத்து வைத்துள்ளார்கள் .அதாவது ஆன்மீகத்துக்கு இஸ்லாம், வாழ்வியலுக்கு குப்ர் !! இது தான் (கிறிஸ்தவம் வரையறுத்த) அதே மதச்சார்பின்மை; இனி இது  முஸ்லிமுக்கும் வழிமுறையாகும் . என்ன சற்று வித்தியாசமாக திரிக்கப் பட்ட  இஸ்லாத்தின் ஆதாரத்தோடு !


                                   ' பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள் '( நபிமொழி ) என்று  இவர்களிடம் சொல்வதைத் தவிர வேறெதுவுமில்லை .

No comments:

Post a Comment