Friday, February 7, 2014

ஒரு புலி நியாயம் பேசுகிறது !!! (பகுதி 2)

              போட்டுத் தள்ளுவது (கொலை செய்வது ) கொள்கையாகி போனதால் அதையே இலட்சியத்துக்கான காரணமாய் மாற்றுவதில் இருந்தே எமது இயக்கத்தின் அரசியல் வடிவம் பெற்றது . ஒரு சிங்களச் சிப்பாயை கொலை செய்வதில் இன்பம் கண்ட எமக்கு சிங்களம் என்ற வார்த்தையில் அடக்குமுறை காட்டப் பட்டது .அதனால் அத்தகு இன அடைமொழி சுமந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் எதிரிகளாக தெரிந்தார்கள் . ஒவ்வொரு தமிழனும் புலியாக சிங்கள இராணுவத்தால் பார்க்கப்பட்டதட்கும் இத்தகு நியாயம் அவர்களுக்கும் இருந்திருக்கலாம் .இந்த  இனவாத பாரம்பரியத்தை பயிற்றுவித்தே நவகாலனித்துவ விசாவை 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் என்ற பெயரில் பிரிட்டிஸ் காரன் கொடுத்தான் . இந்த அநீதியின் பின்னால் ஒரு தவறான மேட்டுக்குடி அரசியல் பாரம்பரியமும் விட்டுச் செல்லப்பட்டது . 


         தேசிய இனங்கள் என்ற அடிப்படை முரண்பாட்டு பேதம் தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக பிரிட்டிஸ் காரனால் காட்டப்பட்டது . இத்தகு குழு முறைக்கு பின்னால் அணிதிரண்டு மரித்துப்போகும் ஒரு துச்சமான ஜீவன்களாக மக்கள் மாறிப்போக ஒரு அதிகாரப் போராட்டம் அவசியமாக்கப்பட்டது .அதுவே இலங்கையின் அரசியலானது . எப்படிப் பார்த்தாலும் அதிகாரம் என்ற இடத்தை தக்கவைக்க இனக் குரோதம் எனும் சீண்டுதல் கட்டாயமாக மாறியது  . ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பெரும்பான்மை காட்டுவதில் இருந்தே பேரினவாத மமதை தலைஎடுத்தது . ஒரு பெருமரத்தை சுற்றி வளரும் அடம்பன் கொடிதான் மற்றைய இனங்கள் என்ற பார்வையில் மனிதம் தூக்கில் இடப்பட்டது . இத்தகு தேசியத்தில் சுதந்திரத்துக்கான அர்த்தம் இன்னும் புரியவில்லை !அல்லது இதுதான் சுதந்திரமா !?


                           சயனைட் குப்பியை எம் கழுத்தில் மட்டுமல்லாமல் காட்டப்படும் இலக்கிலும் ,பாதையிலும் தாராளமாகவே இருந்தது .சுற்றிவர நஞ்சு இருந்ததால் நாமும் மனித விழுமியங்களை அழிக்கும் சயனைட் ஆகி இருந்தோம் . இனவாதத்தால் இலட்சியம் காட்டி பிண வாதத்தால் பிழைப்பு நடத்தும் யுத்த வியாபாரத்தில் சர்வதேச ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய சந்தைக்கு கொழுத்த இலாபம் கொடுக்கும் கொடூர வியாபாரிகள் என முத்திரை பதித்தோம் . மறுபக்கத்தால் போட்டிச் சந்தை சூடு பிடித்தது . புலிக்குச் சளைத்ததா சிங்கம் ! 303 கள் டி 81 ஆக, டிங்கி போட்டுகள் டோராவாக ,சியா மாசெட்டி கிபீர் ஆக தரை ,கடல் ஆகாயம் கலங்கியது . நாசம் மண் மீட்பாகவும் , தேசப்பற்றாகவும் கொலைகரப் பிழைப்பு இருபக்க தேசிய நியாயம் ஆகியது . 

                                                                                எமக்குக் கீழ் தான் எல்லாம்  என்ற மமதை மற்றும் கற்ற அரசியலும் பெற்ற அரசியலும் முஸ்லிமை மிதிக்கும் இனவாத அரசியலில் அடிவைக்க தூண்டியது . இன்று எம்மை மிதித்து வெற்றிகொண்ட பேரினம் ஆர்மி யூனிபோர்முக்கு காவிக்களர் அடித்து சீறிக் குமுறுவது போல்  ,நாமும் வரித்துணியில் விலாசம் காட்டினோம் .நான் என்ற மமதை அரசியல் ,நீ அடிமை என்ற கீழ்தரப் பார்வையோடு வெறியாட்டம் போட்டது .நாம் அன் டீசனாக செய்ததை பேரினம் பொலிடிகல் ரீசனோடு செய்யும் .முதலாளித்துவ அரசியலில் எல்லாம் ஒன்றுதான் சிவப்புக்குள் இருந்து மஞ்சள் புலி பாய்வதும் , சிவப்புக்குள் இருந்து மஞ்சள் சிங்கம் பாய்வதும் வேறுபட்டதல்ல . இந்த கீழ்தர அரசியலின் அழிவுத் தரத்தை சிவிலியன்கள் புரியவேண்டும்.புரியாதவரை மனிதம் மீறப்படுவதில் நியாயம்தான் தெரியும் .அதுவரை அப்ரூவர் ஆனாலும் ஆம்புஸ் அடி விழுவது முதலாளித்துவ அரசியலில் தவிர்க்க முடியாதது .

(பாத்திரம் கற்பனை கலந்த 100% உண்மைகள் )

No comments:

Post a Comment