Saturday, February 15, 2014

இஜ்திஹாத் ஒரு நோக்கு!

 (இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டுள்ளது எனும் மகா தவறுக்கும் , அது யாரும் எப்படியும் நுழைய முடியும் எனும் நிலையில் திறந்துள்ளது எனும் நவீன  வேடிக்கையான  பார்வைக்கும் இடையில் இஸ்லாமிய வாழ்வு நோக்கிய பாதை இன்று அல்லாடி நிற்கின்றது . இத்தகு தவறை புரிய வைக்க ஒரு சிறு பதிவு .                  - அபூ ருக்சான்-)                                                                                                                                      

     இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்குர்ஆன், ஸுன்னா ஆகிய இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களது மரணத்துடன் பூரணப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் மேலதிகமாக ஒன்றைச் சேர்ப்பதற்கோ அல்லது இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்பது மிக முக்கியமான அடிப்படையாகும்.இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் கூறும் நடைமுறைப் பிரச்சினைகளை விளங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி ‘இஜ்திஹாத்’ என்றழைக்கப்படுகிறது.


‘இஜ்திஹாத்’ சொல் விளக்கம்:

  ‘இஜ்திஹாத்‘ என்ற சொல் ‘ஜுஹ்த்’ (முயற்சி) அல்லது ‘ஜஹ்த்’ (கஷ்டம்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். மொழி ரீதியாக இப்பதம் ஒரு விஷயத்தை நிறைவேற்றுவதற்காக அல்லது ஒரு விஷயத்தை அடைந்து கொள்வதற்காக முயற்சித்தல் அல்லது பாடுபடுதல் என்ற கருத்தைத் தருகின்றது.

     இஸ்லாத்தின் பார்வையில் ‘இஜ்திஹாத்’ என்றால் என்ன என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் பின்வரும் வரைவிலக்கணம் மிகப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.‘இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களின் ஆளமான கருத்துக்களில் இருந்து ஷரீஆ உள்ளடக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்ப்புகளைப் பெறுவதற்கு ஒரு சட்டத்துறை அறிஞர் தனது ஆற்றல்களைப் பிரயோகிப்பதே ‘இஜ்திஹாத்’ ஆகும்.

    இவ்விளக்கத்திலிருந்து ‘இஜ்திஹாத்’ பிரயோகிக்கப்பட வேண்டிய பகுதி இஸ்லாமிய சட்டத்துறை (பிக்ஹு) தான் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் . நம்பிக்கையோடு தொடர்பான (அகீதா) விஷயங்கள் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவற்றில் இஜ்திஹாதைப் பிரயோகிக்க முடியாது என்பது மிகப் பெரும்பாலான் அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

   அவ்வாறே அல்குர்ஆன் ஸுன்னாவில் ஆதாரம் இல்லாத விஷயங்களை மார்க்கத்தில் உருவாக்கி விட்டு அவற்றை உருவாக்குவதற்கு இஜ்திஹாத் காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில் அவ்வாறு உருவாக்கப்படும் அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும்.

இஜ்திஹாதின் தேவை!

    இஜ்திஹாத் இஸ்லாமிய சட்டக் கலையின் ஒரு தவிர்க்க முடியாத தேவையாகும். சட்டத்துறையின் வளர்ச்சியும், விருத்தியும் இஜ்திஹாதிலேயே தங்கியுள்ளது எனலாம். அவ்வப்போது எழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை விளக்கி வைப்பது இஜ்திஹாதாகும். இஜ்திஹாதின் வாசல் திறக்கப்படாவிட்டால் நவீன காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகி இருக்கும்.

இஜ்திஹாதிற்கான நபி (ஸல்) அவர்களின் அனுமதி!

     ‘தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு’  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அமருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

  இந்த ஹதீஸின் மூலம் இஜ்திஹாத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதை அவதானிக்கலாம்.உண்மையில் முஸ்லிம் சமூகம் அறிவியல் துறைகளில் முன்னேற்றமடைவதற்கு வழிவகுத்த காரணிகளில் முக்கியமானதாக இருப்பது இஸ்லாம் இஜ்திஹாதிற்கு அளித்த அங்கீகாரமும் உந்துதலுமே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

    இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இஜ்திஹாதிற்கான அனுமதியை வழங்கியதனால் தான் நபித்தோழர்கள் நபியவர்கள் உயிருடன இருக்கும்போதே இஜ்திஹாதில் ஈடுபட்டார்கள்.
1) அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர்கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர்த் தொழுகைக்கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். எனவே, அங்கு சென்றுதான் அதனைத் தொழுவோம் என்று கூற, மற்றும் சிலர் அவ்வாறல்ல. நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப்பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

    ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற ஹதீஸைப் புரிந்து கொள்வதற்காக அவர்கள் இஜ்திஹாத் செய்திருப்பதைக் காணலாம். சிலர் இந்நபிமொழியின் நேரடிக் கருத்தைப் புரிந்து கொள்ள, ஏனையோர் அது கூறும் உள்ளார்ந்த கருத்தைப் புரிந்தார்கள். அதாவது, அஸருத் தொழுகைக்கு அங்கு சென்றடையக் கூடியவாறு வேகமாகச் செல்ல வேண்டுமென்பதே நபியவர்கள் அவ்வாறு கூறியதன் நோக்கம் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.

2) ஸஹாபாக்களில் இருவர் குளிப்புக் கடமையானவர்களாக இருந்தனர். அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் தயம்மும் செய்து கொண்டு தொழுதார். மற்றவர் தொழவில்லை. இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூறவில்லை என தாரிக் பின் ஷிஹாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : அஹ்மத், நஸாஈ)

3)  நபித் தோழர்கள் இருவர் ஒரு பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழுகைக்கு நேரமாகியது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே, தூய்மையான மண்ணினால் தயம்மும் செய்தனர். பின்னர் தொழுகையின் நேரம் முடிவடைய முன்னரே நீரைப் பெற்றுக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகையைத் திருப்பித் தொழுதார். அடுத்தவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபியவர்கள் திருப்பித் தொழாதவரைப் பார்த்து ‘சரியாக ஸுன்னாவைச் செய்தீர். உனது தொழுகை உனக்குப் போதுமானதாகும்’ என்றார்கள். திருப்பித் தொழுதவரைப் பார்த்து ‘உனக்கு இரண்டு தடவைகள் கூலி கிடைக்கும்’ என்று கூறினார்கள் என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்கள்  : அபூதாவுத், பைஹகீ, ஹாகிம், தபரானீ, தாரகுத்னீ)

        மேற்படி மூன்று நிகழ்வுகளும் ஸஹாபாக்கள் இஜ்திஹாத் செய்திருப்பதையும் அதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காண முடிகின்றது. இஜ்திஹாத் செய்வதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இருந்ததனாலேயே அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது இஜ்திஹாத் செய்தது போன்று அவர்கள் மரணித்த பின்னரும் மிகப்பரந்த அளவில் இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாதைப் பிரயோகித்திருப்பதை ஆதாரபூர்வமான செய்திகளினூடாக அறிய முடிகின்றது.

இஜ்திஹாதின் ஒழுக்கங்கள்!

  இவ்வாறான செய்திகளிலிருந்து இஜ்திஹாதுடைய விஷயத்தில் நபித்தோழர்கள் கடைப்பிடித்த சில ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
1. குறிப்பிட்ட ஒரு ஸுன்னாவைப் புரிந்து கொள்வதற்காக நபித்தோழர்கள் முயற்சி செய்து ஒரு முடிவுக்கு வரும்போது அதே ஸுன்னாவைப் புரிந்து கொள்வதில் மாற்றுக் கருத்தைக் கொண்டோரை அவர்கள் பாவிகள் பட்டியலில் சேர்க்கவோ அல்லது அவர்கள் வழிகேடர்கள் என்று கூறவோ முயற்சிக்கவில்லை.

2. தமது கருத்தை மாற்றுக் கருத்தை உடையோரிடம் திணிக்க முற்படவில்லை.

3. தமது இஜ்திஹாதின் அடிப்படையில் தமக்கு சரி என்று பட்டதைச் செய்வதில் அவர்கள் பின் நிற்கவில்லை.

4. இஜ்திஹாதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களிடையே முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவிக்கவில்லை.
இந்த ஒழுங்குகள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவைகளாகும்.

     ஆக, இஜ்திஹாத் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் புரிந்து கொள்வதற்காக இஸ்லாம் அஙகீகரித்து ஆர்வமூட்டிய ஒரு வழிமுறையாக இருக்கின்றது. அதனை சரியாகப் புரிந்து கொண்டு சரியாக அதைப் பிரயோகிக்க அதற்குத் தகுதியானவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

                

No comments:

Post a Comment