Thursday, September 11, 2014

மதச் சார்பின்மை மார்க்க ஆதாரத்தோடு 'பராக் பராக் ' !! முஸ்லீம்களே ஏற்க தயாரா ?(மறு பதிவு )

         இன்றைய ஜாஹிலீய  மேலாதிக்க உலகு,  முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது  அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும்  போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .


                                                                அந்த வகையில் இஸ்லாத்தின் ஆன்மீக அகீதா தவிர்ந்த வாழ்வியல் அகீதாவை விட்டும் முஸ்லீம் சமூகத்தை தூரப்படுத்துவதும் ,அந்த விடயங்களை பிரதான விடயமாக்காது சாதாரண கிளை விடயமாக எடுத்துக் காட்டப்படுவதும் , இஸ்லாம் கூறும் (அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா அம்சங்களும் நடைமுறை சாத்தியமற்றதாக எடுத்துக் காட்டுவதும் ஜாஹிலீய அதிகாரங்களுக்கு ஒரு கடமையாகவே ஆகிவிடுகின்றது .
                                                   
                                               மேற்குலகு கிறிஸ்தவ அதிகார மேலாதிக்கத்தில் இருந்தபோது வாழ்வியல் விவகாரங்களிலும் ,அறிவியலிலும் தவறான சிந்தனைத்தரத்தைக் கொண்டு தீர்ப்புக் கூறத் தொடங்கியதே மதம்  வேறு ,உலகியல் விவகாரம் வேறு என்ற தீர்மானத்தோடு மதச் சார்பின்மை எனும்  கோட்பாடு நடைமுறைப் படுத்துவதற்கு ஏதுவாக  அமைந்தது தெரிந்தோ தெரியாமலோ முஸ்லீம்களும் பின்பற்றி வருகின்றனர்  . ஆனால் இன்று கிறிஸ்தவம் கூறும் அதே  சிந்தனைத்தரமே இஸ்லாத்தின் மீதும் பதியப்பட்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் உலாவிடப் பட்டுள்ளது . ஆனால் இந்த (மகத்தான )பணியை செய்வது கிறிஸ்தவ பாதிரிகளோ ,சந்நியாசிகளோ ,யூத ரப்பிகளோ அல்ல மாறாக  முஸ்லீம் உம்மத்தில் இருந்து உதித்த புத்திஜீவிகளே !!!  

                                                              அதிர்ச்சியும் ஆச்சரியமுமான சில பிரச்சாரங்களை, பதிவுகளை நான் சந்தித்தேன். அதில் குப்ரிய அதிகாரங்களின் கீழான , அவர்கள் தரும் ஜாஹிலீய சட்டங்களை பின்பற்றியவர்களாக முஸ்லீம்கள் வாழ்வது நியாயப்படுத்தப் பட்டிருந்தது . அந்த நியாயத்துக்கு அச்சமோ ,நிர்ப்பந்தமோ காரணமாக்கப் படவில்லை . இஸ்லாம் அதை அங்கீகரித்த ஒன்றாக குர் ஆனிய  ஆதாரமாக யூசுப் (அலை ) அவர்கள் சம்பந்தப் பட்ட வசனங்களும் எடுத்தாளப் பட்டிருந்தது .

                                                                        அதாவது யூசுப் (அலை ) நிராகரிப்பாளனான ஒரு மன்னனிடம் அமைச்சராக இருந்தது ஆதாரமாக்கப் பட்டிருந்தது .  முதலாவது இந்த கருத்தியல் கண்ணோட்டமே பிழையானது. ஏனென்றால் 1. நபி யூசுப் (அலை )அவர்களின் 'சரீஆ'  எமக்கு 'சரீஆ' அல்ல என்ற சாதாரண வாதத்தை இங்கு முன்வைக்கலாம் . 2. குறித்த மன்னன் நீதி தவறியதாக குர் ஆன் குறிப்பிடுகிறதே தவிர 'குப்ரில்' இருந்ததாக சொல்லவில்லை . இந்த இரண்டு காரணங்களும் அவர்களின் தவறான கருத்தியலை உடைக்கப் போதுமானதாகும் .
                                                      அபத்தமான குர் ஆன் விளக்க அறிவின் மூலம் இஸ்லாமிய 'சரீஆ' வின் கீழ் தான் முஸ்லீமின் வாழ்வு கட்டாயமானது எனும் கருத்தியலை விழுங்கி ஏப்பம் விட்டு 'குப்ரை 'அங்கீகரித்த   வாழ்வு இஸ்லாம் அங்கீகரித்தது எனும்  ஒரு நூதன விளக்கத்தை நாக்கூசாமல் எடுத்து வைத்துள்ளார்கள் .அதாவது ஆன்மீகத்துக்கு இஸ்லாம், வாழ்வியலுக்கு குப்ர் !! இது தான் (கிறிஸ்தவம் வரையறுத்த) அதே மதச்சார்பின்மை; இனி இது  முஸ்லிமுக்கும் வழிமுறையாகும் . என்ன சற்று வித்தியாசமாக திரிக்கப் பட்ட  இஸ்லாத்தின் ஆதாரத்தோடு !

                                                 ' பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள் '( நபிமொழி ) என்று  இவர்களிடம் சொல்வதைத் தவிர வேறெதுவுமில்லை .

No comments:

Post a Comment