Wednesday, January 15, 2014

'சியோனிச' உறவில் சிங்கள தேசியம் !


    இயல்பாகவும் ,திட்டமிட்டும் மனிதப் பலவீனங்களை கொண்டு உருவாகும் சிக்கல்களுக்கு தனது தேவைப்பாட்டையும் ,பங்களிப்பையும் வழங்குவதன் ஊடாக தனது நிர்ணயங்களை திணித்து இஸ்ரேல் எனும் தேசத்தை அங்கீகரிக்க வைப்பதே யூதப் பொறிமுறை ஆகும் .

     இஸ்ரேல் உருவாக்கம் ,மற்றும் பாலஸ்தீன் விவகாரம் தொடர்பில் காணப்படும் எதிர் நிலைப்பாடுகளை தமக்கு சாதகமாக பணிய வைப்பதன் அரசியலில் இருந்தே 'சியோனிசம் ' கொஞ்சம் கொஞ்சமாக தனது அநியாய  முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டது . 'இஸ்லாமிய கிலாபத் ' எனும் அதிகார சாம்ராஜ்யத்தை திட்டமிட்டு வீழ்த்தியது தொடங்கி ,இஸ்லாமிய பூமியை வெறும் முஸ்லீம் தேசிய நிலங்களாக பிரித்தது வரை இந்த சியோநிசத்தின் தீய கரங்கள் பங்களிப்பு செலுத்தியுள்ளன . இதன் மூலமாக இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு தேசத்தின் எல்லைகள் இலகுவாக பலப்படுத்தப் பட்டன . 

        ஆனால் சர்வதேச உறவு தொடர்பாகவும் , இஸ்ரேலின் அங்கீகாரத்தை விரிவு படுத்தல் ஊடாகவும் தனது அரசியல் பொருளாதார ஸ்திரத் தன்மையை தக்கவைப்பதட்கும் ,வெளி நாடுகளின் உள்வீட்டு விவகாரங்களில் உதவும் கரங்களாக தம்மை புகுத்தி அதிலிருந்து தமது அங்கீகாரத்தையும் ,சாதகத் தன்மையையும் பேணிக் கொள்வதே இஸ்ரேலிய சர்வதேச அரசியலாகும் . நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் இத்தகு பொறி முறைக்கு தப்பாத அதிகாரங்களே இல்லை என்று சொல்லலாம் .

          இன்னும் அண்மைய காலத்தில் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பில் தீவிர எதிர்ப்பு நிலையை காட்டி நிற்கும் பௌத்த பேரினவாத அமைப்பான 'பொது பல சேனாவின் ' தென் பகுதி பயிற்சி மன்றத்தில் யூதர்களின் நடமாட்டம் அவதானிக்கப் பட்டதாக 'விக்டர் ஐவன் ' (ராவய ) எனும்  மூத்த பத்திரிகையாளர் குறிப்பிட்டதும் ,குறித்த பயிற்சி மன்றத்தை திறந்து வைத்தது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் என்பதும் இந்த இடத்தில நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய அரசியலாகும் .

       முன்னாள் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கூட இஸ்ரேலோடு கொள்கை கோட்பாட்டு ரீதியில் முரண்பாட்டு அரசியலையே கொண்டியங்கினார் . ஆனால் 1968 ஆம் ஆண்டு இந்திய உளவு அமைப்பான 'ரா' உருவாக்கப்பட்டபோது அதன் முதல் தலைவரான ராமேஸ்வர் நாத் காவ்விடம் இந்திரா காந்தி இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட் ' உடன் மிக நெருக்கமான உறவை பேணுமாறு கேட்டுக் கொண்டார் .எல்லையோரத்தில் சவாலாக இருந்த பாகிஸ்தான் ,சீனா என்பன இத்தகு மனப்பாங்கை அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம் . ஆனால் இதன் மூலம் வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டி ,மறைமுகமாக இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை இந்தியா வழங்கியது . அதன் விளைவு நேரடி அங்கீகாரமாக  வெளிப்படையாக  1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பதவி ஏற்ற போது நிகழ்ந்தது .

           1975 ஆம் ஆண்டு சியோனிசம் இனவெறி என கூறும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டிருந்தது அதை எதிர்த்து 1991 இல் இஸ்ரேல் ஒரு தீமானத்தை கொண்டுவந்தபோது இந்தியா அதற்கு சார்பாக வாக்களித்தது .இந்த இடத்தில குறிப்பிடக் கூடிய முக்கிய விடயம் 1980 முதல் 1984 வரை நரசிம்மராவ் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் வெளி விவகார அமைச்சராக இருந்தார் .

         இன்னும் இஸ்ரேலைப் பொறுத்தவரை அதற்கு பலத்த சவாலாக விளங்கிய PLO ,மற்றும் ஹமாஸ் போன்ற இராணுவ அமைப்புகளையும் பாலஸ்தீன் ,இஸ்ரேல் எனும் இரு தேசக் கோட்பாட்டு மாயை காட்டி 
பலத்த சதி நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக தனக்கு பாதகமற்ற நிலைக்குள் கொண்டுவந்துள்ளது .இந்த உதாரண அரசியல் காலத்தால் இலங்கைக்கும் அவசியமாகியது . (இராணுவ தொழில் நுட்ப ரீதியான இஸ்ரேலிய உறவு 1980 களின் பிற்பகுதியில் இருந்து இலங்கையுடன் இருந்து வந்துள்ளது .இலங்கையின் STF எனப்படும் விசேட அதிரடிப்படை இஸ்ரேலிய பயிற்சியின் பின்னரே களமிறக்கப்பட்டது .)

         இப்படி மிக நுணுக்கமான அரசியல் கடிவாளத்தை பெரிய ,சிறிய தேசங்கள் என்ற பாகுபாடின்றி யூத அரசியல் திணித்துள்ளது . தன்னை அனுசரித்தல் ,அங்கீகரித்தல் ,ஆதரவளித்தல் என்ற நிலையை அந்த அரசு எடுப்பதில் இருந்தே அதற்கு மாற்றீடாக குறித்த அரசுடைய விடயங்களுக்கான இராஜதந்திர உதவிகள் இஸ்ரேலால் மேட்கொள்ளப்படும் . இந்தவகையில் முஸ்லீம் எதிர்ப்பு என்ற பொது நிலை யூத ஆதரவு என்ற அங்கீகாரத்தின் வடிவமாகவே கொள்ளப்பட முடியும் . ஆனால் அரசியலில் இரட்டைத் தன்மை சதித் தனங்களை பேணுவது யூதப் பொது இயல்பு .விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இந்த அனுபவத்தை இலங்கை பெற்றும் உள்ளது . இருந்தும் இன்று இஸ்ரேலிய தயவு நோக்கி கைநீட்டியுள்ளது ஆச்சரியமே !!

          யாரெல்லாம் இஸ்ரேலை அங்கீகரிக்கிரார்களோ அவர்களுக்கு பின்னால் தூய்மை அற்ற நிலையும் .தெளிவான சுயநலமும் ,ஒரு கொடூரமான அடக்குமுறை அரசியலும் காணப்படும் .ஆனால் அது உறுதி அற்றதும் அழியக் கூடியதுமாகும் . இந்திரா காந்தி ,இராஜீவ் காந்தி ,போன்றவர்களின்  அயல் நாட்டு அரசியலில் இருந்தும் ,பிரேமதாசா , அதுலத் முதலி , காமினி திஸ்ஸநாயகா போன்ற உள்நாட்டு உதாரணங்கள் மூலமும் இதை உணராதவிடத்து ,ஒரு சுய அழிவு அரசியலில் பலிக்கடா எனும் தலைப்பில் தமது வரலாற்றை எழுதத் தொடங்கட்டும் . அது பல அப்பாவிகளின் இரத்தத்தை அத்தியாயமாக கொண்டு தொடர்ந்து இறுதியாக தனது இரத்தத்தால் முற்றுப்புள்ளி இடுவதாகவும் ஆகிவிடக்கூடும் .  

No comments:

Post a Comment