Monday, January 6, 2014

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுதியில் தர்மமே வெல்லும் .


(சிரியா தொடர்பில் இன்றைய சில தகவல்களில் சற்று கலக்கமடைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்காக இது மீள் பதிவிடப்படுகிறது . 'உஹத் ' களத்தின் கசப்புகள் 'பத்ரின்' இனிப்பை மறக்கடித்தன ! மொங்கோலிய ஆக்கிரமிப்பு இனி ஒரு இஸ்லாத்தின் எழுச்சி வரலாறா !? என்ற அவ நம்பிக்கையை கொடுக்க ஜன் ஜலூத்தில் சத்தியத்தின் வீரர்கள் அல்லாஹ்வின் உதவியோடு அந்த அவ நம்பிக்கையை கபுரில் போட்டு புதைத்தனர் ! வெற்றி தோல்வி தொடர்பான நம்பிக்கை யார் வசம் செல்லவேண்டும் !?என்ற உண்மையை புரிந்து தங்களின் பங்களிப்பையும் ,அர்ப்பணிப்பையும் முஸ்லீம் உம்மாஹ் செய்ய வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும் .)


# அல்லாஹ் நாடியவரை உங்களிடையே நபித்துவம் இருக்கும் .அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பிறகு நபித்துவத்தின் வழியில் 'கிலாபா ' ஆட்சி முறையாக அது அமையும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பிறகு அது கடினமான மன்னராட்சி முறையாக அது அமையும் ;அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பிறகு அது அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சியாக அது அமையும் .அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பின்னர் (மீண்டும் ) நபித்துவ வழிமுறையில் கிலாபா ஆட்சி ஏற்படும் என்று கூறி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அமைதி காத்தார்கள் .
                                                                                  அறிவிப்பவர் :- ஹுதைபா (ரலி )
                                                                                      ஆதாரம் :- முஸ்னத் அஹ்மத் 

முஸ்லீம்களைப் பொறுத்தவரை வரலாற்று நிகழ்வுகளை இரத்தினச் சுருக்கமாகவும் மிகத் துல்லியமான தீர்க்க தரிசனமாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் )குறிப்பிட்டிருக்கும் ஒரு முன்னறிவிப்பே இந்த செய்தியாகும் .

"அவர் தம் இச்சைப்படி எதையும் பேசுவதில்லை அது அவருக்கு 'வஹி ' மூலம் அறிவிக்கப் பட்டதே அன்றி வேறில்லை " என்ற அல்குர் ஆன் வசனப் பிரகாரம் முஸ்லீம் உம்மாவோடு, மனித சமூகத்தோடு அல்லாஹ்வின் தூதரது வார்த்தைகளால் அல்லாஹ் (சுப) சொல்லும் செய்தியானது , ஒரு தூய நிலையில் இருந்து படிமுறையாக கடந்து வந்த கசப்பான கடந்த காலத்தையும் ,எதிர்காலத்தின் மிகத் தெளிவான சுப சோபனமும் தான் என்றால் அது மிகையான கருத்தல்ல .அந்த வகையில் உண்ணிப்பாக நாம் அவதானித்தால் இந்தக் கால நகர்வுகளின் தொடரில் இன்று எஞ்சி இருப்பது தூய கிலாபத்தின் மீள் வருகையில் சுதந்திரமான வஹி வழிகாட்டலின் அமுலாக்கம் தான் .

வஹியின் முன்னறிவிப்பு என்பது முஸ்லிமின் முயற்சியை பிற்போடும் ,அல்லது நடந்தே தீரும் என்ற எதிர்பார்ப்போடு கைகட்டி காத்திருக்கும் ஒரு விடயமாக மாறி விடக் கூடாது .சத்தியத்தின் உயர்சிக்கான உயர்ந்த பட்ச முயற்சி என்ன ? தியாகம் என்ன ? என்பது பற்றி நாம் இறைவனால் கேள்வி கேட்கப் பட மாட்டோம் ! என இந்த நபி மொழி மூலம் ஒரு முஸ்லீம் முடிவெடுத்தால் அதைவிட மிகப்பெரிய அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது . 

வஹியின் முன்னறிவிப்புகள் பற்றி அல்லாஹ்வின் தூதரோ (ஸல் ) எமதருமை சஹாபாக்கள் , தாபியீன்கள் , தபஹ் தாபியீன்கள் , இமாம்கள் ஆகியோரது நடவடிக்கைகள் இவ்வாறு அமையவில்லை . மாறாக குறித்த முன்னறிவிப்பில் தமது பங்களிப்பு ,அதற்கு இடைப்பட்ட கால சவால்களை எதிர்கொள்வது தொடர்பான ஆக்க பூர்வமான முயற்சி ,ஆவல் ,அதற்கான போட்டி , ஆழமான பிரார்த்தனை என்பவற்றை உள்ளடக்கியே அவர்களது வாழ்வு அமைந்திருந்தது .

# கந்தக் போரில் ஷாம், பாரசீகம் ,எமன் என்பன இஸ்லாத்தின் கொடியின் கீழ் வரும் என்ற முன்னறிவிப்பு அல்லாஹ்வின் தூதரால் (ஸல் ) விடப்பட்டது .
(பரா இப்னு ஆசிப் (ரலி ) , நசயி, அஹ்மத் )

எதிரியின் ஒரு கொடூரமான முற்றுகை நிலையில் பட்டினியோடும் , குறைந்த பட்ச ஆயுத வலிமையிலும் நின்று சொல்லப்பட்ட இந்த முன்னறிவிப்பு அந்த சஹாபாக்கள்மத்தியில் பரவியபோது அவர்களது பார்வை இது விடயத்தில் தம்மை பங்காளியாக்கும் போராட்ட உணர்வையே ஏற்படுத்தியது . சத்தியத்தின் கரங்களால் குறித்த பகுதிகளை தட்டித் திறக்கும் கடின முயற்சிக்கு தமது உள்ளக் கதவுகளை தெளிவோடு திறந்தார்கள் என்பதும் காலத்தின் பரிணாமத்தில் அந்த வெற்றிகள் காலம் கடந்தவையாகவே கிடைக்கவும் பெற்றுள்ளதை வரலாறு காட்டி நிற்கின்றது .

# இதே போல இஸ்லாத்தின் முதலாவது கடற்படை தொடர்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) சுபசோபனம் கூறியபோது அதில் தானும் பங்காளியாக வேண்டும் என ஒரு சஹாபிப் பெண்மணி பிரார்த்திக்க கேட்ட வரலாறும் எம்மால் மறக்க முடியாதது . காலத்தால் நீண்ட பிந்தைய அவ்வரலாற்றில் அப்பெண்மணி அந்த படையில் பங்களிப்பு 
செய்ததையும் எம்மால் மறக்க முடியாது.

# கான்ஸ்தான்டிநேபல் வெற்றி பற்றிய சுப செய்தியின் முயற்சிகள் மிகத் தெளிவாகவே அமீர் மூஆவியா (ரலி ) அவர்களின் காலப்பகுதியில் தொடங்கப் பட்டாலும் அதன் வெற்றிச் செய்தி பைசாந்திய பேரரசு பலம் பொருந்திய நிலையில் இருந்த போது ஒரு பலத்த போராட்டத்தின் முடிவில் மாவீரர் முஹம்மத் அல் பாதிர் பெற்றுத் தந்ததை எம்மால் மறக்க முடியாது.(ஹிஜ்ரி 857, கி.பி 1453) அதுவரை இப்பாதையில் கொடுத்த இழப்புகள் சந்தித்த சோதனைகள் என்பது சொல்லில் வடிக்க முடியாதது .

# தாதாரியரால் இஸ்லாமிய சாம்ராஜ்யம் முற்றாகவே செயலிழக்கப் பட வைக்கப் பட்ட போதும் முஸ்லீம் உம்மா செயலற்றுப் போகவில்லை 'ஜன் ஜலூதில் ' அவர்களது இராணுவ வலிமை இஸ்லாமிய இராணுவத்தால் பதம் பார்க்கப் பட்டது . இன்னும் சில இஸ்லாமிய தா யிகள் துல்லியமான பிரச்சார நகர்வின் மூலம் அந்த மொங்கோலிய அதிகாரத்தை அசைத்து மீண்டும் இஸ்லாத்தின் கொடியை பாரினில் ஒரு சக்தி மிக்கதாக பறக்க விட முயற்சி செய்தனர் 'அல் ஹம்துலில்லாஹ் ' வென்றனர் .

வஹியை வார்த்தைகளாக நம்புவதை விட வாழ்க்கையாக்குவது தொடர்பில் எம் முன்னோர்ர்கள் தவறு விட்ட சந்தர்ப்பம் எப்போதும் ஒன்றே ஒன்று தான் அது 'உலகத்தை நேசிப்பதும் மரணத்தை வெறுப்பதும் என்ற அடிப்படையில் தம்மை மாற்றிய போதே நிகழ்ந்தது . தம்மை மறு சீரமைத்து இறைவனை திருப்தி பொருந்திய முகத்தோடு சந்திக்க திட சங்கற்பம் பூண்ட போது எதிரி அஞ்சினான் . இப்போது சுமைகள் சுகங்களாகியது. சுவனம் எல்லையாகியது .

இன்று போலவே சதிமுகங்கள் சூழ இருந்தன யூதர்கள் ,முனாபிக்குகள் என முடிச்சி மாறி கூட்டங்கள் பசப்பு வார்த்தைகளாலும் , உதவும் கரங்கள் போலவும் காட்டி நின்று கழுத்தறுக்கப் பார்த்தனர் .இந்த சில்லறை சித்தாந்திகளை பெரிது படுத்தி இஸ்லாமிய சுடர் முன் நாளை எப்படியும் விழப் போகும் விட்டில் பூச்சிகளுக்கு தமது கருத்து வீட்டில் கௌரவ தொட்டில் கட்டி எதோ பூதம் போல் கட்டும் ,அச்சத் தாலாட்டுப் பாடும் தளங்களை உடையோர் சற்று இது விடயத்தில் சிந்திப்பது நலம் .

யூதனின் கொப்பி, கிறிஸ்தவனின் பேனா , படிப்பது இஸ்லாமா !? என சாதனங்களையும் , சித்தாந்த நடத்தைகளுக்கும் இடையில் வித்தியாசம் காணத் தெரியாத சிலருக்கு இன்றைய மத்திய கிழக்கின் நிகழ்வுகள் குறிப்பாக சிரிய நிகழ்வுகள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை . மஜூசிகளின் மஞ்சனீக்கை எடுத்து பாரசீக கோட்டையை தாக்கினார்கள் என்பதற்காக முஸ்லீம்களை நெருப்பு வணங்கிகளாக சித்தரிப்பது மிகத் தவறானது . மேலும் மேற்கின் உதவி என்ற போலி நாடக பிரச்சார யுத்தத்தை அவன் காட்டும் போலி ஆதாரங்களோடு மீடியாக்கள் வெளியிட கிளிப்பிள்ளை பாடமாக அதை எடுத்தாள நினைப்பதும் மிகத் தவறானது . சர்வதேச முஸ்லீம் உம்மாவின் சகோதரப் பார்வை சந்தேகப் பார்வையாக மாறவேண்டும் என்பதே சியோநிசத்தினதும் , எல்லா குப்ரிய ஆதிக்க சக்திகளதும் ஒரே எதிர்பார்ப்பாகும் .

1 comment: