Tuesday, January 28, 2014

ஒரு பாமர முஸ்லீம் பேசுகிறான் !


         நாங்கள் நஜ்ஜாசிக்கு முன் துணிவோடு நின்ற ஜவ்பர் (ரலி ) போல் நிற்கவில்லை ! பாரசீக தளபதி ருஷ்தூமுக்கு முன்னால் இஸ்லாத்தை முன்வைத்து சவால் விட்ட ருபுஹா பின் ஆமிர் ஆவதற்கு எமக்கு பின்னால் கிலாபாவும் இல்லை ! தாத்தாரியர் முன் சுருண்டு போயிருந்த வைக்கோல் முஸ்லிம் போல்தான் எம் நிலை ! 

            குப்ரிய அகீதாவுக்கு அடிபணிவது புரியாமல் தாகூத்திய சிந்தனைக்கு தலை சாய்த்து விட்டு ,கைகூப்புவதில் மட்டும் சிர்க்கை கண்டுபிடிக்கும் ஏகத்துவ செம்மல்கள் இந்த தேசிய சுவற்றுக்குள் எம்மை நோக்கி முஸ்ரிக் பட்டத்தை வீசித் தொலைக்கட்டும் ! அது பட்டுத் தெறித்து சுற்றிச் சுழன்று அவர்கள் தலையிலும் ஏறி அமரும் ! அதுதான் தாருல் குப்ரின் வாழ்வு  நிலை.

             குப்ரால் ஆளப் படுகிறோம் . தொட்டில் முதல் கபுறு வரை அந்நிய அகீதா இறுக்கிப் பிடிக்க மார்க்கத்தை மதமாக்கி அதனால் இஸ்லாத்தை இழிவாக்கிவிட்டு எஞ்சிய அடையாளங்களோடு மிஞ்சிய சலுகைகளை கெஞ்சிக் கேட்கும் பணிவில் கை கூப்புவதை 'ஜஸ்ட் ' ஒரு டெக்னிக் ஆக ஏன் கருதக் கூடாது !? 

           பிர் அவ்ன்களோடு 'பீஸ் டோக் 'போட்டு நும்ரூதோடு 'கொம்ப்ரமைஸ் ' அடித்து முஸ்லீம்களோடு மட்டும் தவ்ஹீத் பேசும் தவ்வா சிஸ்டம் ரொம்ப மோசம் . அதனால் கிடைக்குமா மோட்சம்!? செவி மடுத்தோம் வழிப்பட்டோம் என்பதில் செவிப்பறையில் பட்டும் படாமல் பறந்து போனது 90 வீதம் மிகுதி 10 வீதத்துக்கு தான் உள் முரண்பாடு ! அதற்கும் தாகூத்தின்  கட்டுப்பாடு ! அதனால் பூரண இஸ்லாத்துக்கே தட்டுப்பாடு ! இஸ்லாம் இல்லாத முஸ்லிமாய் இடுப்பை வளைத்து நாம் நிற்க , பினான்ஸ் போட்ட வாகனத்தில் வந்து குப்ரிய போலீசிடம் அனுமதி பெற்று , மாநாடு போட்டு எம்மை ஏசுவதில் உள்ள தவறு புரிகின்றதா !? நிர்ப்பந்தத்தை தகர்க்காமல் நிர்ப்பந்திக்கப் பட்டவனை தகர்ப்பது முறையா !?

         பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி நீங்கள் குர்பான் கொடுக்கலாம் !? ஆனால் தவிர்க்க முடியாமல் நாம் அந்த இறைச்சியை மட்டும் தின்னக் கூடாது ! இது ரொம்ப அநியாயம் இல்லையா !!?      
       

No comments:

Post a Comment