Friday, January 11, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 03)



 ஐரோப்பிய சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
                                               ஐரோப்பிய நாகரீகத்தில் பெண்கள் என்ற விடயத்தை நாம் ஆராயும் போது , இன்றைய நவீனத்தின்  நாம் ஆராயும் விடயத்தின்  அடிப்படையை தொட்டவர்களாக ஆகிவிடுவோம் . இருண்ட ஐரோப்பா என்ற வரைவிலக்கணத்தை வரலாற்றுப் பாடத்தின் ஒரு தகவலாக அனேகமாக எல்லோரும் கற்றுள்ளோம் .அதில் 'கிறிஸ்தவ சர்ச்சுகளின் ' சர்வதிகாரம் சகலதையும் கடவுளின் பெயரால் தவறாக செய்தது . அந்த தவறில் இருந்து பெண்ணியத்தின் கண்ணியமும் அகௌரவமாக சித்தரிக்கப்பட கிரேக்க ,ரோம நாகரீகத்தை விட சற்று வித்தியாசமான அடக்கு முறையை பெண்களின் மீது மதத்தின்  பெயரால் கிறிஸ்தவம் செய்தது .


                                                'முதல் பாவம் ' என்ற கோட்பாட்டில் இருந்து பெண் நோக்கப்பட்டாள் . ஆதம் (அலை ),ஹவ்வா (அலை ) என்ற முதல் மனித படைப்பின் ஆரம்பத்தில் தடுக்கப்பட்ட சுவனத்தின் கனியை சுவைக்கத் தூண்டியது ஹவ்வாவே (ஏவாள் ).ஆகவே முதலில்  பாவத்தின் பக்கம் மனிதனை தூண்டியவள் பெண்; இதுவே ஆதி பாவம், இதனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்திலேயே பிறக்கின்றன என்ற கோட்பாட்டை சமூக மயமாக்கினார்கள் .

                                                விளைவு அது ஐரோப்பாவையே 'பெண்களுக்கு ஆன்மா உண்டா,இல்லையா  ? என்ற விவாதத்தில் ஈடுபடவைத்தது . ஒரு உயர் குடி சீமான்களின் குழு அன்று அவளுக்கு ஆன்மா இல்லை என அடித்துக் கூறியது . TERTULIAN என்ற கிறிஸ்தவப் பாதிரியார் பின்வருமாறு பெண் விடயத்தில் கருத்துக் கூறினார் . 

              " அவள் சாத்தானிய உணர்வுகளை தூண்டுபவள் . மனிதனை தடுக்கப்பட்ட மரத்தின் பக்கம் கொண்டு சென்றவள் ,இறைவனின் கட்டளைகளை உடைத்தவள் ,மனிதனை ஒழுக்கக் கேட்டில் 
ஆழ்த்துபவள் ." என்று கூறி நின்றார் . இதனடிப்படையில் பெண்கள் தாழ்வாக பார்க்கப் பட்டார்கள் . அவளது அடிப்படை உரிமைகள் கூட இங்கு கேள்விக்குறியானது .


                                                    இந்த காலகட்டத்தில் தான் கிறிஸ்தவ சர்வாதிகாரத்திற்கும் , அறிவியலுக்கும்  இடையில் மோதல் ஏற்பட்டு சமரசத்தின் அடிப்படையில் தவறான ஆன்மீகம், உலகியலில் இருந்து பிரிக்கப் பட்டு சர்ச்சுகளுக்குள் முடக்கப் பட்டது , மதச்சார்பின்மை வாழ்வியல்  கொள்கையாக ஆட்சி ஏறியது . அடங்கியிருந்த பெண்களும்  தமது விடுதலை உணர்வுக்கு அது சிறந்த உணவு தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்  . விஷத்திற்கு அமுதம் என்ற பெயர் கொடுத்து அவளது விடுதலை கீதம் இங்கும்  இசைக்கப்பட்டது . எவ்வாறு ? என்பதை தொடர்ந்தும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் . 


                                                                                                                                                                                  (தொடரும் ...)


                                                                                                       

No comments:

Post a Comment