Saturday, October 20, 2012

அஹ்லாக் இல்லாததால் இஸ்லாம் இல்லையா ? இஸ்லாம் இல்லாததால் அஹ்லாக் வரவில்லையா ?



Photo
அஹ்லாக் இல்லாததால் இஸ்லாம் இல்லையா ? இஸ்லாம் இல்லாததால் அஹ்லாக் வரவில்லையா ? இப்படி ஒரு கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள் ? " முஸ்லீம்கள் எழுச்சி அடையாமல் இருப்பதற்கு  காரணம் அஹ்லாகின்மையே " என பேசியும் எழுதியும் வரும் உலமாக்கள் ,சிந்தனையாளர்கள் இன்று அதிகரித்து விட்டார்கள் . வழமை போலவே வரைவிலக்கணத்தில் இருந்து விளைவை பார்ப்பதை விட்டு விளைவில் இருந்து வரைவிலக்கணத்தை நோக்கும் தவறு இங்கும் பிரயோகிக்கப்படுகின்றது .
 ' டெஸ்ட் டியுப் பேபி ' என்ற விடயத்தில் இருந்து உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன் .அதாவது அதன் மூலம் பிறந்த குழந்தைக்கு எதோ பிறந்து விட்டது என்பதற்காக  சட்டம் சொல்வதிலும் , நியாயம் காட்டுவதிலும் உள்ள வேகமும் உற்சாகமும் அதன் உருவாக்கம் தொடர்பில் கண்டும் காணாதது போல இருத்தளில் எப்படி தவருள்ளதோ அதே போல் தான் இந்த அஹ்லாக் விடயமும் ஆகும் .
'அஹ்லாக்' என்றால் நற்பண்பு என பொருள் கொள்ள முடியும் . அதனை வரைவிலக்கணப் படுத்தும் போது ஒரு சமுதாயம் ஒரு சிந்தனையை ஏற்று அச்சிந்தனையால் இணைக்கப்பட்டு அதனால் வழிநடாத்தப்படும் போது வெளிப்படுத்தப்படும் பண்புக்கூறுகள் 'அஹ்லாக் என குறிப்பிடலாம் . இது இன, மத ,சமுதாய ரீதியில் வேறுபட்டு இருப்பதோடு முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் . அந்த வகையில் இஸ்லாத்தின் அஹ்லாக் என்பது அதன் அகீதாவை ஏற்று அதன் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தளின் மூலம் முஸ்லீம்களுக்கிடையில் நடத்தை ரீதியில் வெளிப்படும் பண்புக்கூறு ஆகும் . எனவே உண்மையான இஸ்லாமிய அஹ்லாகின் வெளிப்பாடு இஸ்லாம் பூரணமாக பிரயோகிக்கப்படும் நிலையிலேயே உருவாகும் . தவிர அஹ்லாக்குகளால் இஸ்லாம் முன்மாதிரிப் படுத்தப்படும் எனும் அளவுகோல் தவறானது .
            எனவே இஸ்லாம் கூறும் அஹ்லாக் என்பது இன்னொரு மதத்திற்கோ , இனத்திற்கோ ,சமூகத்திற்கோ அநீதியாக ,குற்றமாக ,தவறாக இருக்க முடியும் . அந்தப்பார்வை அவர்களுக்கு முஸ்லீம்கள் அஹ்லாக் இல்லாதவர்கள் எனும் கருத்தையும் வலுப்படுத்திவிடும் . இப்போது நாம் அவர்களை கவர அவர்கள் எதிர்பார்க்கும் அஹ்லாகின் வரையறைக்குள் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறி செல்லவும் முற்படுவோம் . இது இன்று நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தவறு .
                
                                                          உண்மை பேசுதல் ,வாய்மை , நேர்மை போன்ற சில பொதுவான பண்புக்கூறுகள் மட்டும் அஹ்லாக் என்ற அளவுகோலும் எம்மில் சிலரிடம் இருக்கின்றது . இந்த பண்புக்கூறுகள் இஸ்லாத்தை பின்பற்றாத பலரிடமும் இருக்கின்றது என்பதால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றது என்று கூற முடியுமா ? பின்வரும் கருத்தைப் பாருங்கள் .                    

         
                                     " அரபுலகத்தில் நான் முஸ்லீம்களை கண்டேன் ஆனால் இஸ்லாத்தைக் காணவில்லை !ஆனால் மேற்குலகில் முஸ்லீம்களை காணவில்லை ஆனால் இஸ்லாத்தை கண்டேன்  " என ஒரு  அறிஞ்சர் 
கருத்துரைத்துள்ளார் !!?? அதாவது அவர்களில் வெளிப்படும் சில பண்புக்கூறுகள் அது எந்த அடிப்படை வரைவிலக்கணத்தில் இருந்து வந்தது என்பதை கணிக்கத்தவருகின்றது . விளைவு இஸ்லாம் நடைமுறையில் இல்லை என்ற ஒரே காரணம் முஸ்லீம் உம்மாவை தரக்குறைவாக்கும் மனோநிலைக்கு இட்டுச்சென்றுள்ளது .
                             
 உண்மையில் நடந்துள்ளது என்னவென்றால் முஸ்லீம உம்மா ,மேலாதிக்கத்தில் இருக்கும் குப்ரியத்தின் பண்புக்கூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது .எனவே அதிலிருந்து இஸ்லாத்தின் அஹ்லாக்கை வரையறுப்பதில் நியாயம் காண்கின்றது . அதற்காக சில பல விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக உள்ளது .

இந்த உதாரணத்தை பாருங்கள். மேற்கின் சிந்தனை பெண்ணை ஒரு கவர்ச்சிப் பொருளாகவும் கலை அம்சம் மிகுந்த மகிழ்ச்சிப் பொருளாகவும் நோக்குகின்றது . ஆனால் இஸ்லாத்தின் கருதுகோள் பெண் என்பவள் இஸ்லாமிய  சமூக கட்டமைப்பின்  முதுகெலும்பு , இஸ்லாமிய குடும்ப அமைப்பின் உயிர் நாடி , எனவே அவள் தரக்குறைவான எல்லா பார்வைகளில் இருந்தும் பாதுகாக்கப் பட வேண்டும் எனவே அவள் தொடர்பாக சில இறுக்கமான கட்டுப்பாடுகளை இட்டு நோக்கும். இந்த அஹ்லாக் அவர்களின் பெண்கள் தொடபான அஹ்லாக்கோடு மோதும் நிலையில் பெண்ணுரிமை எனும் பெயரில் இஸ்லாத்தின் கருத்தை ஒரு இறுக்கமான அடிமைத்துவ பார்வையிலேயே நோக்கச் சொல்கிறது . 


                         இறுதியாக நான் சொல்ல வருவது அஹ்லாக்கினால் இஸ்லாம் முன்மாதிரிப்படுத்தப் படுவது என்பது ஒரு பிழையான நோக்கு . அத்தோடு   உண்மை, நேர்மை ,வாய்மை ...போன்ற சில பொதுப்பண்புகளை பின்பற்றுவதால் மட்டும் அது முன்மாதிரியாகியும் விடாது . அது உண்மையாக இருந்தால் அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) விட இந்த முன்மாதிரிகளில் சிறந்தவரை முஸ்லீம்களாகிய எம்மால் காண முடியாது .(இது மிகைப்படுத்திய கருத்து அல்ல அபு ஜஹலே ' ஏற்றுக்கொண்ட விடயம் .) எனவே இஸ்லாம் எதிர்பார்க்கும் அஹ்லாக் இஸ்லாம் சம்பூர்ணமாக அமுல் 
நடத்தப் படும் போதே உருவாகும் தவிர அஹ்லாக்குகளால் இஸ்லாமிய எழுச்சி உருவாகாது .

             
                                                  
    


'

                                                            

No comments:

Post a Comment