Saturday, October 27, 2012

இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதம் ....




கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.

தேசியவாதம் இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும். இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை து}க்கியது. இதன் வெற்றுக்கோசங்களினால் முஸ்லிம்கள் கவரப்பட்டிருந்த போதிலும் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசியவாதக் கருத்திற்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்களின் விடுதலைக்கான சரியான வழியை இஸ்லாத்திலிருந்து தேட ஆரம்பித்தனர்.

ஓரு தேசத்தின் சிந்தனைத்தரம் நலிவடைகின்ற போது அத்தேசத்தில் தரமற்ற வாழ்க்கை பிணைப்புகளும் (bonds) சமூகப் பெறுமானங்களும் (values) தலை து}க்குகின்றன. இந்த வாழ்க்கை பிணைப்புகள் உயிர் வாழ்தல் என்ற உணர்வை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாகவும் விலங்குகளில் காணப்படுகின்ற வாழ்க்கை பிணைப்புகளை ஒத்ததாகவும் காணப்படுகின்றன. இவை வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதும் அடிக்கடி மாறக்கூடியதும் நிலையற்றதுமாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு தேசத்தின் மீது வெளிநாட்டு அக்கிரமிப்பு இருக்கின்ற போது அதிகமாகக் காணப்படுகின்ற இந்த வாழ்க்கை பிணைப்புகள் சமாதான காலங்களின்போது உணரப்படுவதில்லை. இவற்றில் மிகப்பிரதானமானவை தேசப்பற்றும் தேசியவாதமும் ஆகும்.

தேசப்பற்று என்பது ஒரு நிலப்பிரதேசத்தையும் அங்கு வசிக்கின்ற மக்களையும் இணைக்கின்ற ஒரு பிணைப்பு ஆகும். அதேபோல் தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும். ஒரு மனிதன் தனது ஆதிக்கத்தை தனது குடும்பம் அயலவர்கள் பின்னர் ஒரு பாரிய பிரதேசத்தவர்கள் என்று விரிவு படுத்துகின்றபோது தேசியவாதம் தலை து}க்குகின்றது. ஆதிக்க உணர்வு என்பது ஆதிக்கம் செலுத்தப்படுகின்றவர்களுக்கு மத்தியிலும் காணப்படும் ஒரு உணர்வு என்பதால் இது எப்பொழுதும் முரண்பாடுகளுக்கும் போராட்டங்களுக்குமே வழிகோலுகின்றது. எனவே இந்த வாழ்க்கைப்பிணைப்பு (தேசியவாதம்) மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும்.

அதுமட்டுமல்லாது தேசியவாதம் மனிதவாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒரு வாழ்க்கை முறையையும் (ideology) மனிதர்களுக்கு வழங்குவதில்லை. எனவேதான் தேசிய சமத்துவம் (socialism) மற்றும் தேசிய முதலாளித்துவம் என்பவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஒரு சமுகத்தில் காணப்படவேண்டிய சரியான வாழ்க்கை பிணைப்பு வெறும் உணர்ச்சிகளை மாத்திரம் அடிப்படையாக கொண்டிராமல் அறிவார்ந்த அடிப்படையில் இருக்க வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு என்பது அல்லாஹ்(சுபு)விடம் இருந்து இறக்கப்பட்டதும்அறிவார்ந்த அடிப்படையைக் கொண்டதும்சரியானதும் ஆகும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு நிறுவப்படுகின்ற போது இரத்தம்பிரதேசம் அல்லது ஆதிக்க உணர்வு என்பவற்றை அடிப்படடையாகக் கொண்ட பிழையான வாழ்க்கை பிணைப்புகள் அகற்றப்பட்டு விடுகின்றன. அல்லாஹ் திருக் குர்ஆனிலே கூறுகின்றான்.

கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும்ஆண் மக்களும்சகோதரர்களும்மனைவியரும்குடும்பத்தினரும்சம்பாத்தியங்களும்நீங்கள் நஷ்டத்தைப் பயப்படுகின்ற வியாபாரமும்நீங்கள் விரும்புகின்ற வீடுகளும்அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்அவனுடைய பாதையில் போர் செய்வதையம் விட உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் அப்போது நீங்கள் (தண்டனையைப்பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும் பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவும் மாட்டான்.” (9-24)

இஸ்லாம் மாத்திரமே மனித இனத்திற்கான ஒரேயொரு சரியான வாழ்க்கைத்திட்டம். சோசலிஸம்முதலாளித்துவம் அனைத்துமே பிழையான வாழ்க்கைத்திட்டங்களே ஆகும். இரத்தப்பிணைப்பு பிரதேசப்பிணைப்பு போன்றவற்றிலிருந்து மனிதனுக்கு விடுதலையளிப்பதன் முலம் அவனுடைய அந்தஸ்தை உயர்த்துவதற்காகவே இஸ்லாம் இறக்கப்பட்டது. ஓரு முஸ்லிம் எந்தத் தேசத்தைக் கொண்டும் அடையாளம் காணப்படுவதில்லை. இறைசட்டம் (ஷரீஆ) அமுல்படுத்தப் படுகின்ற நிலம் மாத்திரமே ஒரு முஸ்லிமுக்குரிய தேசம். இஸ்லாமிய நம்பிக்கையைக்கொண்டு மாத்திரமே அவன் அடையாளம் காணப்படுவான். ஓரு முஸ்லிமின் சொந்தக்காரர்கள் இறை விசுவாசம் கொண்டவர்கள் மாத்திரமே. எனவே ஓரு முஸ்லிமுக்கு தாய் சகோதரர்கள் மனைவியர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களிடம் கூட எந்த உறவும் கிடையாதுஅவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. எனவே இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையிலே முஸ்லிம்கள் எல்லோரும் இணைக்கப்படுவார்கள்.

மனிதர்களே நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான். இன்னும் அவ்விருவரிலிருந்தும் அனேக ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். நீங்கள் எவனைக்கொண்டு உங்களுக்குரிய உரிமைகளைக் கேட்டுக்கொள்கின்றீர்களோ அவனையும் இரத்த சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” (4-1)

நபியே உமதிரட்சகன் அவனைத்தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக்கூடாதென்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவருக்கும் சீ’ என்று கூட சொல்ல வேண்டாம். அவ்விருவரையம் விரட்டி விடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக” (17-23)

இந்தக் குர்ஆன் வசனங்களின் விளக்கம் என்னவென்றால் ஒரு முஸ்லிமுக்கு தன் பெற்றோர் மீது அன்பு காட்டுவது அவசியமானதுதான். என்றாலும் இஸ்லாத்தின் விரோதிகளுடன் அவர்கள் வெளிப்படையான தொடர்பை வைத்திருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமிடையில் எந்த உறவும் கிடையாது. அவர்களின் மீது அன்பு காட்டவேண்டிய அவசியமும் கிடையாது.

அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸைத் அறிவிக்கின்றார்கள்.
நபி(ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உபை (ரலி) அவர்களை அழைத்துக்கேட்டார்கள்- உங்களின் தந்தை என்ன கூறினார் என்று தெரியுமா?" அப்துல்லாஹ் (ரலி) கேட்டார்கள் எனது பெற்றோர் உங்களுக்குக் காணிக்கையாகட்டும். எனது தந்தை என்ன கூறினார்?" அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள்." அதற்கு அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள் இறை தூதரே அல்லாஹ் மீது சத்தியமாக அவர் உண்மையையே கூறினார். நீங்கள்தான் கண்ணியத்திற்குரியவர். அவர்தான் வெறுக்கப்படுபவர். இறை தூதரே நீங்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்பு என்னை விடவும் தந்தைக்கு அதிகமான கீழ்ப்படிவு உள்ளவர் வேறு எவருமில்லை என்பதை மதீனாவாசிகள் அறிவார்கள். ஆனால் இப்பொது அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் விரும்பினால் நான் அவருடைய தலையைத் துண்டாடுவேன்." எனக்கூறினார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்கள் மறுப்புத்தெரிவித்தார்கள்.
முஸ்லிம்கள் மதீனாவிற்குத்திரும்பிய போது மதீனா வாசலிலே தனது தந்தையைத் தடுத்து நிறுத்திய அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் தமது வாளை உருவி தந்தையின் தலைக்கு மேல் பிடித்தவர்களாகக் கூறினார்கள் நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள் என்று கூறினீர்களாகண்ணியம் இறை து}தருக்குரியதா அல்லது உமக்குரியதாஎன்பதை நீங்கள் இப்போது விளங்கிக் கொள்வீர்கள். அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் அனுமதி தரும் வரை சத்தியமாக நான் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கவும் மாட்டேன் அடைக்கலம் தரவும்மாட்டேன்" இதனைக்கேட்ட இப்னு உபை இரு முறை சப்தமிட்டுக் கூறினார்கள்ஹஸ்ரஜ் கூட்டத்தினரே எனது மகன் எனது வீட்டை விட்டும் என்னைத் தடுப்பதைப்பாருங்கள்." எத்தனையோ ஸஹாபாக்கள் கெஞ்சிக்கேட்டும் கூட அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இந்தச்செய்தி முஹம்மத்(ஸல்) அவர்களின் காதுகளை எட்டியது. கடைசியாக இப்னு உபையை அனுமதிக்கும்படி முஹம்மத்(ஸல்) அவர்களிடமிருந்து உத்தரவு வந்ததன் பின்னரே நபி(ஸல்) அவர்களிடமிருந்து அனுமதி வந்திருப்பதால் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கின்றேன்" என்று கூறி தமது தந்தையை மதீனாவிற்குள் அனுமதித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் மாமா அபு லஹப் தங்கள் சகோதரர் அபு ஜஹ்ல் போன்றவர்களின் இரத்த உறவைத் துண்டித்திருந்தமையும்அரேபியாவைச் சேர்ந்த முஹம்மத்(ஸல்) ரோமைச் சேர்ந்த சுஹைல் அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால் பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான் போன்றவர்கள் சகோதரர்களாக இருந்தமையும் வெளிப்படையான உண்மைகளாகும்.

ஓ முஸ்லீம்களே! ஈமானியக் கொடியின் கீழ் மாத்திரமே வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எமது போராட்டத்தின் இலக்கு இறை திருப்தியும் அல்லாஹ்வினுடைய சட்டங்களை நிலை நாட்டுவதும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதும் மாத்திரம் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நமது போராட்டத்தின் இலக்கு சொத்துக்காக புகழோ நாட்டின் பெருமையோ இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
அபு முஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் - ஒரு மனிதர் சொத்துக்காகப் போராடுகின்றார் இன்னும் ஒருவர் புகழுக்காகப் போராடுகின்றார் இவர்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் யார்?" இதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் சட்டங்களை உயர்வு பெறச் செய்வதற்காகப் போராடுபவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்"

அல்லாஹ் கூறுகின்றான்
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர்அல்லாஹ்வையும் அவனது து}தரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்;. மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.”(58:22)

நபி இப்றாஹீமிலும் அவருடன் இருந்தவர்களிலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் தம் சமுகத்தாரிடம் கூறினார்கள் - நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி உங்களை நிராகரித்து விட்டோம். இன்னும் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசங் கொள்ளும் வரை உங்களுக்கும் எங்களுக்கம் இடையில் விரோதமும் வெறுப்பும் என்றென்றும் வெளிப்பட்டுவிட்டது.” ( 60-4)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.

எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்.

No comments:

Post a Comment